முன்னாள் அதிமுக அமைச்சரிடம் இருந்து இத்தனை லட்சம் பறிமுதலா? ஷாக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை!!

By Narendran SFirst Published Jul 8, 2022, 7:33 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 41.06 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 41.06 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சமீபகாலமாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், புதுக்கோட்டையில் சி.விஜயபாஸ்கர், திருவண்ணாமலையில் வீரமணி, கோவையில் எஸ்பி வேலுமணி, நாமக்கல்லில் தங்கமணி, எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் வீடுகளில் வருமானத்துக்கு அதிகமாக பல மடங்கு சொத்து வாங்கி குவித்ததாக புகார் வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக முன்னாள் அமைச்சர்கள் மீதும், அவரது மனைவி, மகன், மகள், உறவினர்கள், பினாமிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அதிகாலையிலேயே காமராஜ் வீட்டில் திபுதிபுவென நுழைந்த விஜிலன்ஸ்.. FIRல் உள்ள விவரங்கள் என்ன? பரபரப்பு தகவல்.!

இதில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், நகைகள், ரொக்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான காமராஜ், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தது. மேலும் உணவுத்துறை அமைச்சராக இருந்த போது பாமாயில், பருப்பை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும், நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு தொடர்ந்து கொள்முதல் அனுமதி வழங்கியதாகவும் புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் காமராஜ், இவரது மூத்த மகனான டாக்டர் இனியன், இளைய மகன் டாக்டர் இன்பன், இனியனின் மாமனாரான சந்திரசேகரன், காமராஜ் நண்பரான கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் வக்கீலான உதயகுமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 7 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: 40 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை..! எஸ்.பி.வேலுமனி நண்பர் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்

அதில் 1.4.2015ம் ஆண்டு முதல் 31.3.2021 வரை உணவுத்துறை அமைச்சராக காமராஜ் பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு ஊழல்கள் பிரிந்து தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252க்கு அசையும், அசையா சொத்துகளை வாங்கி 500 சதவீதத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து நன்னிலம் எம்எல்ஏவான காமராஜ் வீடு, அலுவலகம் என திருவாரூர், திருச்சி, தஞ்சை, சென்னை, கோவை உள்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ.41.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

click me!