அதிமுக பிரமுகர் கடையில் வெடிகுண்டு வீச்சு..! 3 பேர் அதிரடி கைது..!

By Manikandan S R SFirst Published Mar 8, 2020, 11:42 AM IST
Highlights

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வெடிகுண்டு வீச்சில் தொடர்புடைய வழக்கறிஞர் ஒருவரின் உதவியாளர் அரியநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் கைதாகி இருக்கின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இருக்கிறது திருப்பைஞ்சீலி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம்(58). இவரது மனைவி புஷ்பா(48). இவர்கள் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். சோமசுந்தரம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், திருப்பைஞ்சீலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் துணை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருப்பைஞ்சீலி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சோமசுந்தரம் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்தநிலையில் கடந்த 2ம் தேதி இரவு புஷ்பாவும் சோமசுந்தரமும் மளிகை கடையில் வியாபாரம் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடை மீது வீசிவிட்டு தப்பி ஓடினர். வெடிகுண்டு வெடித்ததில் கடையில் இருந்த கண்ணாடி உடைந்தது. மேலும் கடையில் இருந்த பொருட்கள் சிலவும் சேதமடைந்தன. வெடிகுண்டு வெடித்ததும் அதிர்ச்சியில் சோமசுந்தரம் மயங்கி விழுந்தார். புஷ்பா லேசான காயமடைந்தார்.

'பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர்'..! அன்பழகன் மறைவால் துயருற்ற சீமான்..!

சோமசுந்தரமும் புஷ்பாவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வெடிகுண்டு வீச்சில் தொடர்புடைய வழக்கறிஞர் ஒருவரின் உதவியாளர் அரியநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் கைதாகி இருக்கின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அரசியல் விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டது தெரிய வந்துள்ளது.

click me!