
45 நிமிடங்கள் நடைபெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தையை அடுத்து தற்போது டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் இடையே இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
பெரும் எதிபார்ப்புக்கிடையே வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.
உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசத்தனர்.
சந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப் கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக என்றார். டிரம்ப் மேலும் கூறும் போது, “ கிம் ஜாங் அன்னுடனான நேரடி பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. நானும், கிம் ஜாங் அன்னும் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண்போம். அணு விவகாரத்தை பொறுத்தவரை இணைந்து பணியாற்றி, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுவோம் என்று தெரிவித்தார்.
கிம் பேசும்போது, அனைத்து தடைகளும் கலைந்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். அனைத்து சந்தேகங்களையும் பேசித்தீர்த்துக்கொண்டோம் என தெரிவித்தார்.
இந்த நிலையில், கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்துவதால், பல முக்கிய விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதித்துக்கொள்ளக்கூடும் என கூறப்படுகிறது.