வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே பாஜக அரசின் லட்சியம் என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டுமே 303 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. இதையடுத்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது குறித்து பேசிய பிரதமர் மோடி, மக்கள் வாழ்வில் ஒரு சீரிய மாற்றத்தையும், இந்தியாவை உயர்ந்த வளர்ச்சிப் பாதையிலும் கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறோம் என கூறினார்.
.130 கோடி இந்திய மக்கள் எங்கள் அரசு மீது தங்களின் அளப்பரிய நம்பிக்கையை காட்டி, எங்களுக்கு முழுத்திறமையோடு பணியாற்ற மேலும் ஒரு வாய்ப்பைக் கொடுத்து ஆசி வழங்கி இருக்கிறார்கள். வலுவான, நிலையான, ஊழலற்ற நிர்வாகத்தைத்தான் மக்கள் விரும்பினார்கள்.
ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருந்தது. இது, நாங்கள் மேம்பாட்டுப் பாதையில் செல்வதற்கு எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டில் ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு என்ற லட்சியத்தைக் கொண்டுள்ளோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதுதான் எங்கள் முன்னுரிமை. இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடையவும், உலகில் நமது இளைஞர்கள் புதிய தொழில்புரிந்து உயரிய இலக்கை அடையச் செய்வதற்கும் எங்கள் அரசு வேகமாக பணியாற்றுகிறது என பிரதமர் மோடி அதிரடியாக தெரிவித்தார்.