2000 சிசிடிவி கேமராக்கள், 24 மணி நேர கண்காணிப்பு.. துணை ராணுவதின் கட்டுப்பாட்டில் வாக்கு எண்ணும் மையங்கள்.

By Ezhilarasan BabuFirst Published Apr 7, 2021, 3:28 PM IST
Highlights

மூன்று மையங்களுக்கும் துணை ராணுவத்தினர் உட்பட 3000 பேர் பதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு மையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

சென்னையில் உள்ள மூன்று வாக்கு என்ணும் மையங்களும் முழுவதுமாக துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக முடிக்கப்பட்ட நிலையில் சென்னையின் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் இருந்து  வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் பாதுகாப்புடன் மொபைல் யூனிட் மூலம் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலை ஆகிய வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக பூட்டி சீல் வைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றது. அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் மூன்று மையங்களும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாக கொண்டுவரப்பட்டுள்ளது. மூன்று மையங்களுக்கும் துணை ராணுவத்தினர் உட்பட 3000 பேர் பதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு மையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் ஆயுதப்படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூர் காவல்துறையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 7 கம்பெனி துணை ராணுவத்தினர் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்படும் அறைகள் முழுவதுமாக சிசிடிவி கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மூன்று மையங்களிலும் சேர்த்து சுமார் 2000 சிசிடிவி கேமராகள் அறைகளின் உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்த காட்சிகளை காவல்துறையினர் மற்றும் முகவர்கள் காண்பதற்கு தேர்தல் ஆணையம் மூலம் LED திரைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு அறையும் பூட்டி சீல் வைக்கப்பட்ட பின் அந்த சாவியானது தேர்தல் வழிகாட்டு நெறிமுறைப்படி துணை ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் காவல்துறையினருக்கு கூட அந்த அறைகளின் அருகே செல்ல அனுமதி மறுக்கப்படும். மேலும், ஒவ்வொரு மையத்தின் நுழைவு வாயிலிலும் உள்ளூர் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்ட உரிய அடையாள அட்டை உடையவர்கள் மட்டுமே மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதிப்படுவர். மேலும், தேர்தல் வாக்கு எண்ணும் நாள் நெருங்கும் வேளையில் தற்போதுள்ள பாதுகாப்பை இரட்டிப்பாக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!