18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு….இன்று விசாரணைத் தொடங்குகிறார் மூன்றாவது நீதிபதி …. அரசியல் பரபரப்பு !!

First Published Jul 23, 2018, 6:23 AM IST
Highlights
18 mla case enquiry commences from today by third judge


டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணன் இன்று முதல் தொடர்நது 5 நாட்களுக்கு விசாரணை நடத்த உள்ளார்.

தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில்  சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை உச்சநீதிமன்றனம்  மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

புதிய நீதிபதி சத்ய நாராயணன் கடந்த 4-ம் தேதி  இது தொடர்பாக விசாரணையை தொடங்கினார். முதலில் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வழக்கறிஞர்களின் கருத்தை கேட்டறிந்தார். 

அதன்பின்னர், வழக்கு விசாரணையை  இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார். இதையடுத்து  இன்று முதல் வரும் வெள்ளி கிழமை வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்திருந்தார்.

அதன்படி பரபரப்பான இந்த சூழ்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணையை நீதிபதி சத்தியநாராயணன் இன்று தொடங்குகிறார். அரசு மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளனர்.

நீதிபதி சத்ய நாராயணன் தனது விசாரணையை ஒரு வாரத்திற்குள் முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த வழக்கில்  ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!