
கடந்த 14 மணி நேரமாக சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சசிகலாவின் பெயரில் இருந்த 16 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை 200 கார்களில் வந்த 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லி, புனே, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி என பல இடங்களில் இருந்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் இதற்காக வந்தனர்.
பணப் பரிவர்த்தனைக்கு கணக்கு காட்ட, பெயரளவுக்கு போலியாக செயல்பட்டு வந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கண்டறியப்பட்டதின் அடிப்படையிலேயே வருமான வரி சோதனைக்கு தேவையான விவரங்கள் திரட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான, சென்னை, கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மது ஆலைகள், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிகை என பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டு இன்று காலை முதல் நடத்தப்பட்டு வருகிறது.
டிடிவி தினகரன், திவாகரன், விவேக், நடராஜன், மகாதேவன், விவேக்-ன் சகோதரி கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமார், டாக்டர் வெங்கடேஷ், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில், விவேக்கின் மாமனார், மணல் ஒப்பந்தக்காரர் ஆறுமுக சாமி, மேலும், காற்றாலை நிறுவனங்கள், சுரானா குழுமம், புதுச்சேரியில் லட்சுமி குரூப் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெயா டிவி சிஇஓவும் இளவரசியின் மகனுமான விவேக்கின் மகாலிங்கபுரம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் மன்னார்குடியில் திவாகரன் ஆதரவாளர் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்துள்ளது. ஆதரவாளர்கள் செல்வம், பேராசிரியர் அன்புக்கரசி வீடுகளிலும் சோதனை நிறைவு பெற்றுள்ளது.
ஆனால் மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீட்டில் இரவு மற்றும் நாளையும் சோதனை தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஒட்டுமொத்தமான சோதனையில் சசிகலாவின் 16 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.