நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் யோகாசனங்கள்! அதிகாலையில் செய்வது நல்லது...?

By manimegalai aFirst Published Jan 18, 2022, 6:32 AM IST
Highlights

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்பது உங்க இரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கும் நோயாகும். இன்றைய நவீன உலகில், நீரிழிவு நோய் என்பது உலகளாவிய நோயாக மாறி வருகிறது. இரத்த குளுக்கோஸ் அளவானது அதிகமாகும் போது இது கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது. இது உங்கள் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும். நீரிழிவு நோய் இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது. 

கர்ப்பிணிப் பெண்களுக்கு கூட கர்ப்ப கால நீரழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மன அழுத்தம், நீரிழிவு நோயுடன் தொடர்புடையவை என்பது அனைவரும் அறிந்ததே. உண்மையில், மன அழுத்தம், மனச்சோர்வு என்பது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய ஒன்றாகும். குறிப்பாக, இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 25 வயதிற்குட்பட்ட 4 பேரில் ஒருவருக்கு இந்த டைப்-2 நீரிழிவு நோய் உள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த நீரிழிவு நோயை நிர்வகிக்க நாம் சில வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். 

உங்க உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதன் மூலமும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் நீரழிவு நோயை நாம் தடுக்க முடியும்.  குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள், கீரை, காய்கறிகள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நீரிழிவு நோயைத் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் தடுப்பதிலும் பெரும் பங்காற்றும். 

அதுமட்டுமின்றி, கீழே கொடுக்கப்பட்ட யோகா ஆசனம் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும். ஆழ்ந்த சுவாச முறை மற்றும் தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்கள்:
 
பிராணாயாமா மற்றும் தியானம்:

பிராணாயாமா மற்றும் தியானத்தின் நன்மைகள் நிறைய உள்ளன. ஒருவர் பிராணாயாமா செய்யும்போது, அது ஒருவித தளர்வு நிலையை அளிக்கின்றது. தசைகளில், குறிப்பாக கழுத்து மற்றும் தோள்களில் இருக்கும் அழுத்தத்தை குறைத்து, ஒருவரை நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுகிறது. ஆழ்ந்த சுவாசத்தையும் தியானத்தையும் செய்யும்போது 'எண்டோர்பின்ஸ்' எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளிப்படுகின்றன.
 
பிராணாயாமா மற்றும் தியானத்தை தவறாமல் பயிற்சி செய்யும்போது, இன்சுலின் செயல்பாட்டைத் தடுக்கும் அட்ரினலின், கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் அளவு குறைகிறது. இது நீரிழிவு நோயை எளிதாக கட்டுப்படுத்த உதவுகிறது.

பிராணாயாமம் செய்வது உடலுக்கு நல்லது:

தரை அல்லது யோகா மேட்டில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு உங்கள் கட்டைவிரலால் உங்கள் வலது பக்க மூக்கு துவாரத்தை மூடிக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் இடது பக்க மூக்கின் வழியே மூச்சை இழுக்கவும். உங்கள் முதுகை நேராகவும், உடல் தளர்வாகவும், இடது கையை உங்கள் இடது முழங்காலில் வைத்திருங்கள். அடுத்து வலது கையின் மோதிர விரலால் உங்கள் இடது பக்க மூக்கை மூடுங்கள். பின்னர் வலது மூக்கிலிருந்து மூச்சை வெளியே விடுங்கள். 15 நிமிடங்களுக்கு மீண்டும் மீண்டும் இதே போன்று செய்யவும். தேவைப்பட்டால், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்.

பிராணாயாமா பயிற்சி செய்ய நீங்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுமே செலவிட்டால் போதும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், இதய நோய்களைத் தடுப்பதிலும் அவை நன்மை பயக்குகின்றன. மேலும், விரைவில் நீங்கள் உங்களை அமைதியும், மன அழுத்தம் இல்லாதவராகவும் காண முடியும். எனவே, நீரிழிவு நோயாளிகள் அனைவரும் பிராணாயாமா போன்ற யோகாசனங்களை கடைப்பிடித்து அதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். அவற்றை பயிற்சி செய்து உங்கள் உடலிலும் மனதிலும் நன்மை பயக்கும் விளைவுகளை நிச்சயம் உங்களால் உணர முடியும்.

click me!