
காளான் பிரியாணி
காளான் பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சா ? வாங்களேன் எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்..அப்படியே சாபிட்டு பார்க்கலாமே...
தேவையான பொருட்கள்:
சாதத்திற்கு...
பாசுமதி அரிசி - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 4
கருப்பு ஏலக்காய் - 1
மிளகு - 4
உப்பு - தேவையான அளவு
காளான் மசாலாவிற்கு...
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 2
மிளகு - 4
கருப்பு ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காளான் - 200 கிராம்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
அலங்கரிக்க...
வெங்காயம் - 1/2 கப்
முந்திரி - 5-6
குங்குமப்பூ - 1 சிட்டிகை (1 டேபிள் ஸ்பூன் பாலில் ஊற வைத்தது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சாதத்திற்கு...
முதலில் அரிசியை நன்கு கழுவி, நீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, ஏலக்காய் மற்றும் மிளகு சேர்த்து 1 நிமிடம் வறுக்க வேண்டும். பின்பு அரிசியை அத்துடன் சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி வைத்து, அரிசியானது முக்கால் பாகம் வெந்ததும், அதனை இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
காளான் மசாலாவிற்கு...
காளானை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, மிளகு, பட்டை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயமானது பொன்னிறமானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பின்பு மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதில் காளானை சேர்த்து, மூடி வைத்து, காளானை வேக வைக்க வேண்டும். காளானானது நன்கு வெந்து, தண்ணரானது வற்றியதும், அதில் கொத்தமல்லியை தூவி இறக்க வேண்டும்.
அலங்கரிக்க...
வெங்காயத்தை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
முந்திரியையும் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிரியாணி...
ஒரு அகன்ற வாணலியில் மூன்றில் ஒரு பங்கு சாதத்தைப் போட்டு, அதன் மேல் காளான் மசாலா சிறிதளவு பரப்பி, மீண்டும் பாதி சாதத்தைப் போட்டு, மறுபடியும் மீதமுள்ள அனைத்து காளான் மசாலாவையும் பரப்பி, இறுதியில் மீதமிருக்கும் சாதத்தைப் பரப்பிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் அனைத்து பொருட்களும் ஒன்று சேரும் வரை, மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.
இறுதியில் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரியை தூவி, குங்குமப்பூ பாலை ஊற்றி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால்,காளான் பிரியாணி ரெடி...
என்ன நீங்க ரெடியா....உடனே செய்யுங்க...சுவைத்து பாருங்க....
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.