நாள்பட்ட சர்க்கரை நோய் உள்ளிட்ட பிற இணை நோய் உள்ளவர்கள் நாள்தோறும் தங்கள் பணிகளை குறைந்தபட்சம் 30 நிமிடம் நின்று கொண்டு தொடர்வது, என்பது இந்நோய்க்கு சிறந்த உடற்பயிற்ச்சி என்று புதிய ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
இன்றைய நவீன காலத்தில், மேற்கத்திய உணவு பழக்கவழக்கங்கள் நமக்கு தந்த பரிசு சர்க்கரை வியாதி. ஏனெனில், இன்றைய வாழ்க்கை முறையில் நள்ளிரவைத் தாண்டியும் தொலைக்காட்சி பார்ப்பது, யூடியூபில் சினிமா பார்ப்பது, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற ஊடகங்களில் கருத்துக்களை பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் நேரத்தை தொலைத்துவிட்டு, நேரம் கழித்து உறங்க செல்வது இன்றைய இளையோர் மத்தியில் வழக்கமாகி வருகிறது. ஆகையால், சர்க்கரை வியாதி வாலிபர்களையும் அதிக அளவில் குறிவைத்து தாக்க துவங்கியுள்ளது.
சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை சேர்வதே ஆகும். அதாவது, நமது உடல் இன்சுலினை எதிர்க்கும் போதோ அல்லது உடலில் போதுமான அளவு இன்சுலின் இல்லாதது தான் சர்க்கரை வியாதி என்கிறோம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் உடல் நலத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை எனில் உடலில் உள்ள இதயம், இரத்த நாளங்கள், கண்கள் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் மோசமான நிலையை சந்திக்க நேரிடும்.
எனவே, நாள்பட்ட சர்க்கரை நோய் உள்ளிட்ட பிற இணை நோய் உள்ளவர்கள் நாள்தோறும் தங்கள் பணிகளை குறைந்தபட்சம் 30 நிமிடம் நின்று கொண்டு தொடர்வது, என்பது இந்நோய்க்கு சிறந்த உடற்பயிற்ச்சி என்று புதிய ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
சமீபத்திய துர்கு பிஇடி மையம் (Turku PET) மற்றும் யு.கே.கே (UKK) இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தங்கள் பணிகளை உட்கார்ந்து செய்வதை காட்டிலும், நின்று கொண்டு செய்யும் போது இன்சுலின் உணர்திறனுடன் தொடர்புடையதாக இருப்பதை கவனித்தனர். எனவே, தினசரி நிற்கும் நேரத்தை அதிகரிப்பது நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவும் என்பது கண்டறியப்படுள்ளது. ஆம், நீங்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 60 நிமிடங்கள் வரை தங்கள் பணிகளை சுறுசுறுப்பாக நின்று கொண்டு மேற்கொள்வது டைப் 2 சர்க்கரை நோயை 30 சதவீதம் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்தி ஜெர்னல் அறிவியல் (Journal of Science) மற்றும் மருத்துவ இதழில் (Medicine in Sport) வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், இதன் தாக்கமானது உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம் என்ற செய்தி மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
பொதுவாக சர்க்கரை வியாதி டைப் 1 மற்றும் டைப் 2 என்று இரண்டு வகைப்படும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக பசி மற்றும் தாகம், சோர்வு, மங்கலான பார்வை, காயங்கள் மற்றும் புண்கள் விரைவில் குணமாகாமல் இருப்பது போன்றவை இவைகளின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
டைப்-1 சர்க்கரை வியாதி சிறுவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு அதிக அளவில் ஏற்படுவதாக ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் டைப்-1 சர்க்கரை நோய் பரம்பரை நோயாக மற்றும் தடுக்க முடியாததாக உள்ளது. இந்த வகை சர்க்கரை நோய், உடலில் உள்ள ஆரோக்கியமாக செல்களை கிருமிகள் என்று நினைத்து நோயெதிர்ப்பு அமைப்பு தவறுதலாக தாக்க ஆரம்பிக்கிறது. இவை கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை அழிக்கின்றன. இதன் காரணமாக உடலால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது.
டைப்-2 சர்க்கரை வியாதி பெரும்பாலும் வயதானவர்களைஅதிக அளவு குறி வைப்பதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீப காலமாகவே இதன் வேகம் அதிகரித்து 30 வயதை கடந்த அனைவரையும் தாக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக டைப் -2 சர்க்கரை வியாதி கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, உலகளவில் சுமார் 422 மில்லியன் மக்களுக்கு சர்க்கரை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை நோய் காரணமாக சுமார் 1.6 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். அதுமட்டுமின்றி, 2045-க்குள் இந்த எண்ணிக்கையானது 700 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கட்டுக்குள் வைப்பதற்கு, சிறந்த வழிமுறைகளாக முறையாக உணவு பழக்கம், புகை பிடிக்காதது, ஆல்கஹாலை தவிர்ப்பது, உடல் எடையை பராமரிப்பது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் போன்றவையாகும்.