ரூ10க்கு சாப்பாடு..! மதுரையின் அட்சயபாத்திரம்..! ராமு தாத்தா மரணம்.. சோகத்தில் மதுரை மக்கள்.!

By T BalamurukanFirst Published Jul 12, 2020, 8:22 PM IST
Highlights

ரூ10க்கு சாப்பாடு போட்ட பொன்விழா கண்ட வில்லூர் ராமு தாத்தா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மரணம் மதுரை மக்களுக்கு மட்டுமல்லாது தென்மாவட்ட ஏழை மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
 


ரூ10க்கு சாப்பாடு போட்ட பொன்விழா கண்ட வில்லூர் ராமு தாத்தா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மரணம் மதுரை மக்களுக்கு மட்டுமல்லாது தென்மாவட்ட ஏழை மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

மதுரையின் ஏழைகளின் அட்சயபாத்திரமாக திகழ்ந்தவர் வில்லூர் ராமு தாத்தா.1967ம் ஆண்டில் இருந்து ஏழைகளுக்கு மலிவான விலையில் உணவு வழங்கி வந்தது ஏழை எளிய மக்களின் வயிற்றை நிறையச் செய்தது வந்தவர் இவர். மதுரையில் ரூ.100 கொடுத்தாலும் அளவு சாப்பாடு வயிறு நிறையாமல் அறைகுறையோடு திரும்பும் உணவங்களுக்கு மத்தியில் வெறும் ரூ10 வயிறு நிறைய சாப்பாடும் அன்பும் நிறைந்து பரிமாறி வாடிக்கையாளர்களை அனுப்பி வந்த ராமு தாத்தா மதுரை மண்ணில் இருந்து விடைபெற்றார்.அவரை நம்பி இருந்த வரியவர்கள் அவர் உணவகம் அடைக்கப்பட்டுள்ளதால் வாடிபோய் இருக்கிறார்கள். மதுரை மக்களின் இதயத்திலும்,  அண்ணா பேருந்து நிலையம் அரசு மருத்துவனைக்கு  வந்து செல்லும் மக்களின் மனதிலும் நிலையான இடம் பிடித்தவர் ராமு தாத்தா.

1957 ஆம் ஆண்டு வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்ற மதுரை ராமு தாத்தா, வள்ளலாரை போன்று தன்னால் ஆன உதவியை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில்,  ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற சேவையுணர்வில், இவருக்கு அவரது மனைவி பூரணத்தம்மாளும் துணையாக இருந்தார். ஆரம்ப கால கட்டத்தில் வெறும் ஒன்னே கால் ரூபாய்க்கு 2 காய்கறி கூட்டுடன் சாப்பாடு வழங்க தொடங்கிய இவர், நாளடைவில் பொருளாதாரம் மற்றும் விலை வாசி வளர்ச்சி அடைந்த நிலையில் 2 ரூபாய், 5 ரூபாய் எனச்சாப்பாட்டு விலையையும் ராமு தாத்தா சிறிது சிறிதாக உயர்த்தி வந்தார்.  எனினும் அவரின் சாப்பாட்டின் தரம் குறையவில்லை.  

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என முக்கிய சந்திப்புகளை கொண்ட அண்ணா பேருந்து நிலையம் அருகே ராமு தாத்தா கடை அமைந்து இருக்க அங்கு வருபவர்கள் ராமு தாத்தா கடைக்கும் உணவு சாப்பிட வருவார்கள். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்,  அன்றாட கூலித்தொழிலாளர்கள் இவரது உணவகத்தில் வந்து நிறைவாக சாப்பிடுவார்கள்.காலையில் 2 வகை சட்டினியுடன்  இட்லி, தோசை, பொங்கலும், மதியம் 2 பொறியல், ரசம், சாம்பார், அப்பளம், மோருடன் சாப்பாடும் வெறும் 10 ரூபாய்க்கு வழங்கி வந்தார். இவரது சேவையை பாராட்டி மதுரையில் பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் காலமான இவர் மனைவியை பிரிந்த நிலையிலும், தளராத மனதுடன் மக்களுக்கு உணவு அளித்து வந்தார்.  இந்நிலையில் கடந்த சில மாதமாக வயோதிகத்தாலும், உடல் நலகுறைவாலும்  பாதிக்கப்பட்டிருந்த அவரால் கடையைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ராமு தாத்தா காலமானார். இவரது இறப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

click me!