கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் முக பாதுகாப்பு கவசம் அணிந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
T.Balamurukan
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் முக பாதுகாப்பு கவசம் அணிந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல மாநிலங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. வைரஸ் தொற்றான கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுஇடங்களில் கிருமி நாசினி தெளித்தல், வெளிமாநிலங்களில் இருந்து பயணிகளிடம் பரிசோதனை ஆகியன மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், காய்கறி மார்க்கெட், ரயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் பஸ்களில் சுகாதாரம் காக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பஸ்கள் டிரிப் முடிந்தவுடன் நன்கு சுத்தம் செய்யப்பட வேண்டும். நோய் தொற்று பயணிகளுக்கு ஏற்படாத வகையில் லைசால் உள்ளிட்ட கிருமி நாசினியால் பஸ்களை கழுவி சுத்தம் செய்திட கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் பயணிகளுடன் ஒருநாள் முழுக்க பயணிப்பதால் அவர்கள் முக கவசம் அணிந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆம்னி பஸ்களிலும் ஸ்கிரின் அகற்றுப்பட்டுள்ளதா? என்பதையும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.தனியார் பஸ்களிலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றிட கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஒரு டிரிப் முடிந்தவுடன் கைகளை சோப்பால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தேவையேற்படின் அவர்களும் முக கவசம் அணிந்து பணியாற்ற கேட்டு கொண்டுள்ளனர்.
வெளி மாநில பஸ்களை பொறுத்தவரை எல்லையோர பகுதிகளில் அவற்றை சோதனை செய்த பின்னரே, தமிழகத்திற்குள் அனுப்புகின்றனர். இருப்பினும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பஸ்களில் அதிக கூட்டத்தை தவிர்க்குமாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் சுற்றரிக்கை அனுப்பியிருக்கின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், புதுப்பித்தல் ஆகியவை ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.