கொரோனா கொடூரம்.. கீழடிக்கு பார்வையாளர்கள் வரத் தடை..!

By Thiraviaraj RMFirst Published Mar 18, 2020, 9:48 AM IST
Highlights

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில்  2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவி வருவதால் மார்ச் 31ஆம் தேதி வரை கீழடியை பார்வையிட சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாமென்று ஊராட்சிமன்றத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

T.Balamurukan

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில்  2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவி வருவதால் மார்ச் 31ஆம் தேதி வரை கீழடியை பார்வையிட சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாமென்று ஊராட்சிமன்றத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்புவனம் அருகே கீழடியில் ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடந்த 5 கட்ட அகழாய்வுகளில் கீழடி நகர நாகரிகம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்தது. அதன்பின் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய 4 இடங்களில் 6 ஆம் கட்ட அகழாய்வுக்காக தமிழக அரசு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து, கடந்த பிப்ரவரி19 இல் அகழாய்வுப் பணியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தார்.

கொந்தகையில் பழமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணி நடக்கிறது. இங்கு 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. அங்கு அதிகளவில் முதுமக்கள் தாழிகள், மண்பானைகள், குடுவைகள் கண்டறியப்பட்டன.  அகரத்தில் 2 ஏக்கா் அரசு நிலத்தில் அகழாய்வுப் பணிக்காக சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. விரைவில் மணலூரிலும் அகழாய்வுப் பணி தொடங்கும்.இந்நிலையில் கீழடியில் நீதியம்மாள் என்பவரின் நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு செங்கல் சுவா்கள் இரண்டும், சிறிய அளவிலான மண்பானைகளும் கண்டறியப்பட்டன. இதற்கிடையில், கீழடியில் தோண்டப்பட்ட ஒரு குழியிலிருந்து சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண் பானை இருந்தது கண்டெடுக்கப்பட்டது.

 கீழடியில் நடந்து வரும் அகழாய்வைக் காண பல இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மார்ச் 31 ஆம் தேதி வரை அகழாய்வை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என கீழடி ஊராட்சித் தலைவா் வெங்கடசுப்ரமணியன் கேட்டுகொண்டுள்ளார்.

click me!