இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா.. மிகவும் ஆபத்தானது.. கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.. அதிர்ச்சி தகவல்.!

By vinoth kumarFirst Published Jun 8, 2021, 1:39 PM IST
Highlights

உருமாற்றம் அடைந்த வைரஸ் ஒருவரை பாதித்தால் உடல் எடை இழப்பு, சுவாச பாதையில் பாதிப்பு, நுரையீரலில் புண்கள் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டன் மற்றும் பிரேசிலில் இருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் புதியதாக உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோன வைரஸ், இப்போது உலகின் சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி  பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை, விட இந்த கொரோனா வைரஸ் இப்போது ஒவ்வொரு நாடுகளிலும் உருமாற்றம் அடைந்து, முன்பை விட தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாகவும், அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயர்களை உலக சுகாதார அமைப்பு வைத்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா வைரசுக்கு டெல்டா எனவும், இதேபோல், பரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா ஆல்பா எனவும், தென் ஆப்பிரிக்காவில் 2020-ம் ஆண்டு மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது.

இந்நிலையில், புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் மையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.  பி.1.1.28.2 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் ஒருவரை பாதித்தால் உடல் எடை இழப்பு, சுவாச பாதையில் பாதிப்பு, நுரையீரலில் புண்கள் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மனித உடலின் நோய் எதிர்ப்பு திறனில் இருந்து உருமாற்றம் அடைந்த கிருமி எப்படி தப்பிக்கிறது என்பதை கண்காணித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் புனே நுண்ணுயிரியல் மையம் தெரிவிக்கிறது.

click me!