
மஞ்சளில் எண்ணற்ற மருத்துவ குணம் நிறைந்துள்ளது. தமிழர் மரபில் மஞ்சளை வணங்கிவிட்டுத் தான் பெரும்பாலான நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, எந்தப் பயிர் விளைச்சலாக இருந்தாலும், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வணங்கிவிட்டு நடவு பணியைத் தொடங்குவதுதான் நம் முன்னோர் மரபு. மங்களகரத்தின் குறியீடான மஞ்சள், மிகச் சிறந்த கிருமிநாசினி. எனவேதான், புதிதாகத் தொடங்கும் எந்த ஒரு காரியத்திலும் மஞ்சள் முன்னிலை வகிக்கும்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த மஞ்சள், இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் அதிக அளவில் விளைகிறது. இதற்கு ‘காலேயகம், தாறவி’ என்று வேறு பெயர்களும் உள்ளது. இந்திய இயற்கை மருத்துவத்திலும், மஞ்சளுக்கென்று தனி இடம் உள்ளது. மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி. மஞ்சள் கிழங்கு தனித்துவமான நறுமணமும், வெப்பத் தன்மையும் கொண்டது.
முந்தைய காலத்தில், பாரம்பரியமாக பெண்கள் தங்கள் சருமத்துக்கு மஞ்சள் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை பின்பற்றி வந்தனர். ஆனால், நாகரிக மாற்றத்தால் இன்றைய இளம் பெண்கள் மஞ்சள் பூசுவதைத் தவிர்த்து, செயற்கை ரசாயனங்கள் கலந்த கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள்.
இவற்றால் நாளடைவில் முகம் பொலிவிழந்து, சருமம் வறண்டு போகும். மேலும், இது சிலருக்கு தோல் பிரச்சினைகளைக் கூட ஏற்படுத்தலாம்.
மஞ்சள் பூசி குளிப்பது மருத்துவ முறையில் ஒன்றாகவும் உள்ளது. முகத்திற்குப் போடும் மஞ்சளில் முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள் என மூன்று வகைகள் உள்ளன. இயற்கையான முறையில் விளைவித்த நாட்டு மஞ்சளை நன்றாக அரைத்து முகத்தில் பூசலாம். அல்லது மஞ்சளுடன் பயத்தம் மாவு, ஆவாரம் பூ பொடி, பூலான் கிழங்கு பொடி, கற்றாழை ஜெல் போன்றவற்றைக் கலந்தும் பூசலாம்.
ஆனால், மஞ்சள் கிழங்கை உரசி, சருமத்தில் தேய்த்துக் குளிப்பதே சரியான முறை. முகத்தில் தொடங்கி பாதம் வரை மஞ்சள் பூசி குளிக்கலாம். மஞ்சள் பூசி குளிப்பதால், சருமம் பளபளக்கும். முகத்தில் தேவையற்ற முடிகள் முளைக்காது. இளமையைத் தக்கவைக்கும். முகப்பருக்களால் ஏற்படும் கருமை நீங்கும். சருமம் எளிதில் சோர்வடையாமல், நீண்ட நேரம் புத்துணர்வுடன் இருக்க உதவும் என அறிவியல் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
மஞ்சளுடன் வேப்பிலையை சேர்த்து அரைத்து, சருமத்தில் தேய்த்துக் குளித்து வந்தால் அம்மை நோயினால் ஏற்பட்ட கொப்புளங்கள், சேற்றுப்புண், அழற்சி, அடிபட்ட காயங்கள், கட்டிகள் போன்ற சரும பிரச்சினைகள் குணமாகும். சரும பிரச்சினைகளுக்காக மஞ்சளைப் பயன்படுத்தும்போது, பெரும்பாலும் இரவில் பூசுவது நல்ல பலன் தரும்.
மஞ்சளை நேரடியாக பூசுவதற்கு விருப்பமில்லாதவர்கள் கற்றாழை ஜெல் அல்லது சந்தனத்துடன் சேர்த்து நன்றாகக் குழைத்து பேஸ்பேக் போன்று பயன்படுத்தலாம். முல்தானிமெட்டி பொடி, மஞ்சள், சந்தனம் ஆகியவற்றுடன் தண்ணீர் அல்லது பன்னீர் கலந்து பேஸ்பேக்காக தடவி, 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இதன் மூலம் முகம் பளபளப்புடன் புத்துணர்வாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.