Pongal 2023: இந்தாண்டு எந்த திசையில் பொங்கல் வைத்து வழிபடலாம்..?

By Pani MonishaFirst Published Jan 14, 2023, 1:24 PM IST
Highlights

Pongal 2023: தமிழர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல். இது தமிழ்நாட்டில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் பண்டியாகவும் திகழ்கிறது.  

குடும்பம் மற்றும் நண்பர்களை மகிழ்விப்பதற்கும், அறுவடைக் காலத்தை சிறப்பு செய்யவும் பொங்கல் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எப்போதும் போல பொங்கலை சாதாரணமாக கொண்டாடிவிட முடியாது. அதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. பொங்கல் பானையை இந்த திசையில் தான் வைக்க வேண்டும், அடுப்பு இவ்வளவு தான் எரிய வேண்டும், குறிப்பிட்ட பொருட்களை மட்டும் வைத்து தான் சமைக்க வேண்டும் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நவநாகரீகமான காலத்தில் அதையெல்லாம் நாம் இழந்து வருகிறோம். எனினும் குறிப்பிட்ட சில பாரம்பரிய பொங்கல் பழக்கங்களை நினைவூட்டும் விதமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

போகி

தைப்பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் வீட்டு தெய்வத்தை வணங்க வேண்டும். அதைச் செய்துவிட்டு தைத்திருநாளில் சூரியப் பொங்கல் கொண்டாடலாம்.  உலகில் உள்ள அனைத்து உயிர்களிடத்தும் பாகுபாடு இல்லாமல் கருணை புரியும் கடவுளான சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் முறை இது. சூரியப் பொங்கலை நாம் சூரிய உதய நேரத்தில் கொண்டாட வேண்டும். இதுதான் தைப்பொங்கலின் தனிச் சிறப்பு.

பொங்கல் வைக்கும் முறை

சூரிய உதயத்திற்கு முன் பொங்கல் வைப்பதால் அனைவருக்கும் விடுமுறை காலை உணவை நன்றாக சாப்பிட முடியும். இந்தாண்டு பொங்கல் ஞாயிறுக்கிழமை விடுமுறை நாளில் வருகிறது. அதனால் நமக்கு பொங்கல் வைக்க நிறைய நேரம் இருக்கிறது. எனினும் காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பொங்கல் வைக்கலாம். பொங்கல் செய்ய இதுவே சிறந்த நேரம். பொங்கல் பானையை சுத்தம் செய்து அடுப்பில் ஏற்றியதும், முதலில் பாலை ஊற்ற வேண்டும். அதையடுத்து தண்ணீர் ஊற்றி பொங்கி வந்தவுடன்  அரசி, பாசிப் பருப்பு, வெல்லம் போட்டு பொங்கல் வைக்கலாம். அதையடுத்து பொங்கல் பானையுடன் கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழைமரம் மற்றும் என்னென்ன பொருட்கள் எல்லாம் நமக்கு உழவர்களால் கிடைக்கிறதே அனைத்தையும் வாங்கி வைத்து சூரிய பகவானுக்கு படையல் போட வேண்டும். 

இதையும் படிங்க: Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

நல்ல நேரம்

ஒவ்வொரு வீட்டுக்கும் பொங்கல் வைக்கும் நடைமுறை வேறுபடும். சிலர் அரிசி, பருப்பு சேர்த்து பொங்கல் வைப்பார்கள். இன்னும் சிலர் பால் மற்றும் சர்க்கரையுடன் பொங்கல் சமைப்பார்கள். இன்னும் சிலர் காய்கறிகளுடன் பொங்கல் செய்து சூரியனுக்கு படைப்பார்கள். இன்னும் சிலர் இனிப்பான பொங்கலுக்கு காரமான புளிச்சேர்த்து மொச்சைப் பருப்பு போட்டு குழம்பு வைப்பார்கள். அதனால் இப்படித்தான் பொங்கல் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் எல்லாம் கிடையாது. ஆனால் குறிப்பிட்ட நேரம் மற்றும் திசை மட்டும் தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எப்போதும் கிழக்கு பார்த்து தான் பொங்கல் வைக்க வேண்டும். அதுதான் சூரியன் உதிக்கும் இடம். 

மாட்டுப் பொங்கல்

கிராமங்களில் தைப்பொங்கலை விடவும் மாட்டுப் பொங்கல் தான் சிறப்பாக கொண்டாடப்படும். இன்னும் சில கிராமங்களில் இரண்டுமே களக்கட்டும். அன்றைய நாளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் ஆகியவை நடைபெறும். மேலும் இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவது மிகவும் விசேஷமாகும். முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து வைத்து வழிபடுவது இன்னும் சிறப்பு. 

காணும் பொங்கல்

நீர்நிலை அதிகமுள்ள பகுதிகளில் காணும் பொங்கல் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடக்கும். உள்மாவட்டங்களில் அன்றைய நாளில் தான் மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகள் நடக்கும். அதுதவிர சொந்த பந்தங்கள், வீட்டுப் பெரியவர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர்களுடன் பொங்கல் கொண்டாட்டி மகிழ்வது காணும் பொங்கலின் சிறப்பு. காவிரி டெல்டா மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மாலை நேரத்தில் நீர்நிலைப் பகுதிகள் மற்றும் கடற்கரைகளுக்கு சென்று பொங்கல் கொண்டாடுவார்கள். 

இதையும் படிங்க: ’கணுப்பிடி' எப்போது வைக்க வேண்டும்? அண்ணன், தம்பி நலம் பெருக வழிபடும் பெண்களின் கவனத்திற்கு..

click me!