ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்த சாம்சன்.. கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள்..! சிஸ்கேவிற்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Sep 22, 2020, 9:41 PM IST
Highlights

சஞ்சு சாம்சனின் அதிரடி அரைசதம், ஸ்மித்தின் பொறுப்பான அரைசதம் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் கடைசி நேர காட்டடியால் 20 ஓவரில் 216 ரன்களை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 217 ரன்களை சிஎஸ்கேவிற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ராஜஸ்தான் ராயல்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன், அறிமுக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினார். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த சஞ்சு சாம்சன், ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்தார்.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் சிறியது என்பதால், ஜடேஜா, பியூஷ் சாவ்லா ஆகியோரின் பவுலிங்கை பொளந்துகட்டினார் சஞ்சு சாம்சன். ஜடேஜா வீசிய 7வது ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசிய சாம்சன், சாவ்லா வீசிய 8வது ஓவரில் 3 சிக்ஸர்களையும் விளாசினார். சாவ்லாவின் அந்த ஓவரில் ஸ்மித்தும் ஒரு சிக்ஸர் அடித்தார். மீண்டும் சாவ்லா வீசிய 10வது ஓவரில் ஸ்மித் 2 சிக்ஸர்களையும் சாம்சன் ஒரு சிக்ஸரையும் அடிக்க, 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 119 ரன்களை குவித்துவிட்டது.

சஞ்சு சாம்சன் ஆடிய விதத்தில், என்ன செய்வதென்று தெரியாமல் தல தோனியே நிராயுதபாணியாக நின்றார். போகிற போக்கில் போகட்டும்; பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கே தோனி சென்றுவிட்டார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சாம்சன், லுங்கி இங்கிடி வீசிய இன்னிங்ஸின் 12வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

சாம்சன், 32 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் மில்லர்(0), உத்தப்பா(5), ராகுல் டெவாட்டியா(10), ரியான் பராக்(6) என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அரைசதம் அடித்த ஸ்மித், கடைசி வரை களத்தில் நின்று நன்றாக ஃபினிஷிங் செய்ய வேண்டும் என நினைத்தார். ஆனால் ஸ்மித் 47 பந்தில் தலா 4 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சாம்சன் ஆடிய ஆட்டத்திற்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போன வேகத்திற்கு பெரிய ஸ்கோர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஓவரில் 186 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் யாருமே எதிர்பார்த்திராத விதமாக லுங்கி இங்கிடி வீசிய கடைசி ஓவரில் ஜோஃப்ரா ஆர்சச்ர், 4 சிக்ஸர்களை விளாசினார். அதில் 2 நோ பால்களும் கூட. மேலும் ஒரு வைடையும் இங்கிடி வீசினார். எனவே கடைசி ஓவரில் மட்டும் ராஜஸ்தான் அணி 30 ரன்களை விளாச, 20 ஓவரில் 216 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்து, 217 ரன்கள் என்ற கடின இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது. சாம்சன் தொடங்கிவைத்ததை, ஆர்ச்சர் கடைசி ஓவரில் வெற்றிகரமாக முடித்துவைத்தார்.

217 ரன்கள் என்பது மிகக்கடினமான இலக்குதான் என்றபோதிலும், ஷார்ஜா மைதானம் சிறியது என்பதாலும், சிஎஸ்கே அணியில் ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், தோனி ஆகிய பவர் ஹிட்டர்கள் இருப்பதாலும், இலக்கை வெற்றிகரமாக விரட்டுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
 

click me!