அஷ்வின் பொய் பேசுறாரு.. கடுமையாக சாடிய முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Mar 27, 2019, 11:37 AM IST
Highlights

அஷ்வின் பந்துவீச வரும்போதே பட்லர் கிரீஸை விட்டு வெளியேறியிருந்தார். அதைக்கண்ட அஷ்வின் பந்தை போடாமல் ஸ்டம்பில் அடித்து பட்லரை ரன் அவுட் செய்தார். தேர்டு அம்பயரும் அதற்கு அவுட் கொடுத்தார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின், பட்லரை மன்கேடிங் முறையில் ரன் அவுட் செய்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அஷ்வினின் செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் குவிந்துவருகிறது. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த திங்கட்கிழமை நடந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, கெய்லின் அதிரடியான 79 ரன்கள் மற்றும் கடைசி நேரத்தில் சர்ஃபராஸ் கானின் சாமர்த்தியமான பேட்டிங்கின் காரணமாக 20 ஓவர் முடிவில் 184 ரன்களை குவித்தது. 

185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருந்தார். அவரை வீழ்த்தவே முடியாமல் பஞ்சாப் அணி திணறியது. 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 69 ரன்களை குவித்து மிரட்டலாக ஆடிக்கொண்டிருந்தார். அவரை வீழ்த்த முடியாமல் பஞ்சாப் அணி திணறிக்கொண்டிருந்த வேளையில், 13வது ஓவரை வீசிய அஷ்வின், பட்லரை மன்கேடிங் முறையில் ரன் அவுட் செய்தார். 

அஷ்வின் பந்துவீச வரும்போதே பட்லர் கிரீஸை விட்டு வெளியேறியிருந்தார். அதைக்கண்ட அஷ்வின் பந்தை போடாமல் ஸ்டம்பில் அடித்து பட்லரை ரன் அவுட் செய்தார். தேர்டு அம்பயரும் அதற்கு அவுட் கொடுத்தார். அதனால் கடும் அதிருப்தியில் வெளியேறினார் பட்லர். அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. 

அஷ்வினின் இந்த செயலை ஷேன் வார்னே கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் அஷ்வின் செய்தது கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டதுதான் என்றும், இதை வைத்து அஷ்வினின் கேரக்டரை தவறாக பேசுவது சரியானது அல்ல என்றும் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். 

அந்த போட்டிக்கு பின்னர் அந்த சம்பவம் குறித்து பேசிய அஷ்வின், அந்த ரன் அவுட் போகிறபோக்கில் எதேச்சையாக செய்யப்பட்டதே தவிர திட்டமிடப்பட்டது அல்ல. அது விதிகளுக்கு உட்பட்டதுதான் என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல விளக்கமளித்தார். 

ஆனால் அஷ்வினுக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறது. இருந்தாலும் அதை மறைக்க முயல்கிறார். அவரது செயலில் அவர் தெளிவாக இல்லை. அவர் பொய் சொல்கிறார். உண்மையை சொல்லவில்லை என முன்னாள் வீரர் பிரசன்னா சாடியுள்ளார். 
 

click me!