மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கியில் ரூ.15 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணியளவில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. மறைமுகமாக உள்ள கருப்புபணத்தை மீட்கவும் கட்டுப்படுத்தவும் இந்த திட்டத்தை அறிவிப்பதாக மோடி தெரிவித்தார். மேலும் மீட்கப்படும் கருப்பு பணத்தில் இருந்து ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ஒரு குறிப்பிட்ட பணம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து மக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என அறிவித்தார். இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏராளமானோர் வங்கியில் ரூ.15 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்தனர். அவ்வாறு அதிகமான தொகையை வங்கியில் டெபாசிட் செய்பவர்களை கண்டறிந்து அவர்களிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இதைதொடர்ந்து நோட்டீசுக்கு பதில் அளிக்காமல் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.