
நண்பர்களுடன் குடித்துவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு திருமணத்திற்கு நல்ல நேரத்தில் வராமல் நீண்ட நேரம் கழித்து வந்த மணமகன் வந்ததால் மணமகளுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றன. மாலை நேரம் ஆனதும் மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகனின் வருகைக்காக திருமணம் நடக்கும் மண்டபத்தில் காத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும் மணமகன் வந்து சேரவில்லை.
இதனால், மணமகள் குடும்பத்தினர் பொறுமையிழந்தனர். அந்த பக்கம் மணமகன் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து, 8 மணிக்கு மண்டபத்திற்கு தனது நண்பர்கள் பட்டாளத்துடன் மணமகன் வந்து சேர்ந்துள்ளார். இதனால், மணமகள் குடும்பத்தினருடன் சண்டை போட்டுள்ளார். இதனையெல்லாம் கவனித்த மணமகளின் தந்தை, மணமகனை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில், திருமணத்திற்கு வந்த உறவுக்காரர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தி அவருக்கே தனது மகளை மணமுடித்து வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.