உலகையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் தவறான தகவலாம்…. பகிரங்க மன்னிப்பு கோரிய வினோத் ராய்.!

By manimegalai aFirst Published Oct 28, 2021, 7:21 PM IST
Highlights

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார் உலகை உலுக்கியது. இதுவரை இந்தியா கண்டிராத மிகப்பெரிய ஊழலாக அது பேசப்பட்டது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார் உலகை உலுக்கியது. இதுவரை இந்தியா கண்டிராத மிகப்பெரிய ஊழலாக அது பேசப்பட்டது.

திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலமான 2011-ல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அப்போதைய மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலப்படுத்தினார். இந்தியாவில் ஊழல் பெரிய விசயமில்லை என்றாலும் அந்த தொகை இதுவரை கண்டிராத ஒன்றாக இருந்தது. உலக தலைவர்கள் வரை, உள்ளூர்வாசிகள் வரை 1.76-க்கு அருகில் போடப்பட்ட பத்து பூஜ்ஜியங்களை பார்த்து வாயடைத்து நின்றனர்.

2ஜி வழக்கில் கூட்டணி ஆட்சி நடைபெற்றாலும், அப்போதைய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்த திமுக-வின் ஆ.ராஜா, தூக்கியெறியப்பட்டார். ஊழல் முறைகேட்டுக்கு துணைபோனதாக கலைஞரின் மகள் கனிமொழி மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. ஆ.ராஜா, கனிமொழி இருவரும் 2ஜி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் தங்களை பழிவாங்கி விட்டதாக திமுக அலறிதுடித்தது. கிராமங்கள் வரை பேசுபொருளாக மாறிய 2ஜி வழக்கு திமுக-வை ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி வீசியதோடு, அடுத்த பத்து ஆண்டுகளில் கோட்டையில் அமரவிடாமல் செய்தது.

2ஜி முறைகேடுகளை அம்பலப்படுத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் பெரிதாக பாராட்டப்பட்டார். உலகையே உலுக்கிய 2ஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. போதிய ஆதாராங்களை சமர்ப்பிக்காததால் தோல்வியை தழுவியது. இந்த வழக்கில் தீர்ப்பளித்தஓ.பி.சைனி, ஊழல் உண்மையில் நடக்கவில்லை, அப்படி நடந்ததாக பிம்பம் உருவாக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பாகக் கூறப்பட்டவை அனைத்தும் புரளியும் புனைவுமாக இருப்பதால், இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று அதிரடியாக தீர்ப்பளித்தார்.

இதையடுத்து வழக்கில் இருந்து ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2ஜி வழக்கில் அப்போதை பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொடர்பு படுத்தி பேசப்பட்டது. அவர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. வழக்கு குறித்து 2014-ல்  ‘டைம்ஸ் நவ்’தொலைக்காட்சிக்கு அர்னாப் கோஸ்வாமி, கணக்கு தணிக்கையாளர் வினோத் ராயிடம் பேட்டி கண்டார். அப்போது பேசிய வினோத் ராய், 2ஜி ஊழல் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரை சேர்க்கக்கூடாது என்று தன்னை காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபம் நிர்பந்தித்ததாக வினோத் ராய் கூறியிருந்தார்.

இதையடுத்து வினோத் ராய் தம்மீது அவதூறு பரப்பியதாக சஞ்சய் நிருபம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொய்யான அறிக்கை அளித்ததற்காக வினோத் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சஞ்சய் நிருபம் கோரியிருந்தார். இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வினோத் ராய், சஞ்சய் நிருபமுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். அர்னாப் கோஸ்வாமி எடுத்த பேட்டியில் தான் கூறியதில் உண்மையில்லை என்றும் தான் அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கோருவதாகவும் பிரமாண பத்திரத்தில் வினோத் ராய் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சய் நிருபம், 2ஜி மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது தவறான அறிக்கை சமர்ப்பித்து அவதூறு கிளப்பிய குற்றத்திற்காக நாட்டு மக்களிடம் வினோத் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

click me!