டேஞ்சர்… தென் மேற்கு பருவ மழையால் தமிழகத்துக்கும் பேராபத்து … காவிரியில் 3 லட்சம் கன அடி நீர் திறக்க முடிவு…

By Selvanayagam PFirst Published Aug 16, 2018, 12:36 PM IST
Highlights

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென் மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்து வருவதால் இரு மாநிலங்களிலும் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து கிட்டத்தட்ட 2 லட்சம் கன அடி நீரும், பவானி உள்ளிட்ட அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுவதால் அவை அனைத்தும் காவிரியில் திறந்துவிடப்படவுள்ளது. இதனால் காவிரி கரையோரமாக உள்ள 15 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2006ம் ஆண்டு கர்நாடகா அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 2.50 லட்சம் கன அடி நீர் அப்படியே மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டதால் காவிரி ஆறு ஒடும் 15 மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இரண்டரை லட்சம் கன அடி நீர் திறந்துவிட்டதற்கே தமிழகத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தன.



தற்போது அதைவிட  பேராபத்து உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 2  லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை ஏற்கனவே நிரம்பியதால் அங்கிருந்து 1.50 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் கனமழை காரணமாக கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர்  திறக்கப்பட்டு மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே  கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கன மழையால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து பவானி அணியில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



அதே நேரத்தில் கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பேய் மழை  கொட்டி வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு  வரும் நீரின் அளவு 1 லட்சம் கனஅடி அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்னகவே  பவானி சாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளாதால் அங்கு வரும் அனைத்து தண்ணீரும் கண்டிப்பாக அதாவது 1 லட்சம் கனஅடி நீரும் அப்படியே வெளியெறறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தண்ணீர்  பவானி கூடுதுறையான காவிரி ஆற்றில் கலந்து காவிரியுடன் வெளியேறும் இதனால் இன்றோ அல்லது நாளையே காவிரி ஆற்றில் 3  லட்சம் கன அடி நீர் கரை புரண்டு ஒட வாய்ப்புள்ளது.

அப்படி வெளியேறும் பட்சத்தில் காவிரி கரையோரம் உள்ள 15 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் நீரியல் வல்லுநர்கள். ஏற்கனவே கேரள மாநிலம் கனமழை மற்றும் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு டேஞ்சர் தமிழகத்துக்க வர வாய்ப்பிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!