ரூ.366 கோடி வரி மோசடி; சாலையோர வியாபாரி மீது புகார்.. வீட்டை தட்டிய ஜிஎஸ்டி அதிகாரிகள் - அதிர வைக்கும் பின்னணி

By Raghupati RFirst Published Jan 28, 2023, 5:04 PM IST
Highlights

தினமும் தெருக்களில் துணிகளை விற்று 500 ரூபாய் சம்பாதிக்கும் சிறு வியாபாரியின் வீட்டுக் கதவை தட்டி ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 366 கோடி ரூபாயை அதிகாரிகள் கேட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் இருக்கும் தெருக்களில் துணிகளை விற்று தினமும் 500 ரூபாய் சம்பாதித்து வருபவர் 40 வயது துணி வியாபாரி இஜாஸ் அகமது. 

ஜிஎஸ்டி வரியாக 366 கோடி ரூபாய் கட்டுமாறு, இவரை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, இந்த விஷயத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் உதவியை இஜாஸ் அகமது நாடியுள்ளார்.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான பழைய பொருட்கள் கடை நடத்துவதாக ஜன்சத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல் கிராம முகவரியில் ஜிஎஸ்டி எண் பெறுவதற்காக பதிவு செய்து இருக்கிறார். 

இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?

துவக்கத்தில் இவர் செய்த தொழிலில் தினமும் ரூ. 500 முதல் ரூ. 1000 வரை வருமானம் கிடைத்துள்ளது. இந்த தொழிலில் அவருக்கு லாபம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால், துணி விற்கும் வியாபாரியாக மாறியுள்ளார்.   இதுகுறித்து இஜாஸ் அகமது கூறுகையில், ''சிஏ-விடம் எனது ஜிஎஸ்டி கணக்கை முடிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக துணி விற்று வருகிறேன். முதலில் பழைய இரும்பு உள்பட பழைய பொருட்களை விற்று வந்தேன். அது எனக்கு சரியான லாபத்தை கொடுக்கவில்லை என்ற காரணத்தால், துணி விற்க துவங்கிவிட்டேன். இந்த மோசடிக்குப் பின்னர் இருப்பவர்கள் யார் என்பதை ஜிஎஸ்டி அதிகாரிகள்தான் கண்டுபிடிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு உத்தரப்பிரதேச ஜிஎஸ்டி துறையின் இணை கமிஷனர் ஜெஎஸ் சுக்லா கூறுகையில், ''ரூ. 300 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி வரி தொடர்பான பில் அனுப்பப்பட்டுள்ளது. இது பெரிய மோசடியாக கருதப்படுகிறது. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் சிலர் கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். 

விசாரணையில் தங்களது நிறுவனங்களின் கணக்கு எண்ணை வேறு சிலர் பயன்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஜாஸ் அகமது மற்றும் அவரது சிஏ இருவரையும் விசாரித்து வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பின்னர்தான் அனைத்து விவரங்களையும் வெளியிடுவோம்'' என்று தெரிவித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அகமதுவின் வீட்டுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் வரும்போது, அவர் வீட்டில் இல்லை என்பதால், துறை அதிகாரிகளிடம் புகார் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், ஜிஎஸ்டி துறை கேட்டு இருக்கும் அனைத்து விவரங்களையும் கொடுத்து இருப்பதாக அகமது சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?

click me!