14 சுங்கச் சாவடிகளின் இன்று முதல் கட்டண உயர்வு …. இதுவரை 250 % அளவுக்கு கட்டணம் அதிகரிப்பு….

By Selvanayagam PFirst Published Sep 1, 2018, 7:22 AM IST
Highlights

தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள 14 சுங்கச் சாவடிகளுக்கு உயர்த்தப்பட்ட கட்டணம் இன்று  முதல் அமலுக்கு வருகிறது

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 461 சுங்கச் சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச் சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


சுங்க கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச் சாவடிகளின் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை - பாடாலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை-தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம்-குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னமராவதி, தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை உள்ளிட்ட 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் கார்களுக்கு ரூ.80, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.75 வசூலிக்கப்படும். இதன் மூலம் இந்த சாலையில் ஒரு கி.மீ.க்கு ரூ.1.09 வசூலிக்கப்படுகிறது. பொன்னம்பலப்பட்டி சுங்கச் சாவடியில் கி.மீ.க்கு ரூ.2.02 அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் மற்ற 12 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


இக்கட்டண உயர்வுக்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சுங்கச் சாவடிகளில் பெருமளவில் கட்டணம் வசூலாகிறது. ஆனால் சாலைகள் பராமரிப்பு மோசமாக உள்ளது என அவர்கள் குற்றம் சாட்டினர்.

கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 250 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு சுங்கச் சாவடிகளில் கி.மீ.க்கு 40 பைசாவாக இருந்த கட்டணம் இப்போது ரூ.1.08 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!