ஜூலை 1-ந்தேதிக்கு பின் வருமானவரி கணக்கு ரிட்டன் தாக்கல் செய்பவர்கள் கண்டிப்பாக தங்களின் பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்து இருப்பது கட்டாயமாகும். அவ்வாறு இணைத்து இருப்பவர்கள் மட்டுமே ரிட்டன் தாக்கல் செய்ய முடியும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில், வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்பவர்கள், பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி நாளாகும்.
தற்போது வருமானவரி கணக்கு ரிட்டன் தாக்கல்செய்து வரும் நபர்கள், தங்கள் பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைத்து இருந்தால், மட்டுமே அவர்களால் இ-ரிட்டன் தாக்கல் செய்யமுடியும். அவ்வாறு இணைக்காதவர்கள், ரிட்டன் தாக்கல் செய்ய முடியாது. ஒருவேளை ஆதார் எண் பெறாமல் இருந்தால், ஆதார் பதிவு செய்ததற்கான அடையாள எண்ணையாவது குறி்ப்பிட வேண்டும்.
பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பது ஒன்றும் கடினமான வேலையில்லை. எந்த ஒரு தனிநபரும் வருமானவரி இணையதளத்தில் சென்று அதை எளிதாகச் செய்து விடமுடியும். சரி எப்படி இணைப்பது என்றுதானே கேட்கிறீர்கள்….
- முதலில் வருமானவரித்துறையின் இணைதளமானincometaxindiaefiling.gov.in என்ற தளத்துக்கு செல்ல வேண்டும். வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்பவர்கள் அவர்களின் பதிவு எண்ணை குறிப்பிடலாம், வருமானவரி செலுத்தாமல், பான்கார்டு மட்டும் வைத்து இருப்பவர்கள் நேரடியாக இணையதளத்துக்கு சென்றுவிடலாம்.
- இணைதளத்தின் இடதுபுறம், ஆதாரை இணைக்கும் (லிங்க் ஆதார்) ஒரு “பட்டன்” கொடுக்கப்பட்டு இருக்கும். அதை “கிளிக்” செய்ய வேண்டும்.
- அதில், ஆதார், பான்கார்டு எண்ணை குறிப்பிடும் இரு கட்டங்கள் இருக்கும். அதில் உங்களின் ஆதார் எண்ணையும், பான்கார்டு எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.
- ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் பெயரை தவறு இல்லாமல் பதிவு செய்ய வேண்டும்.
- நீங்கள் குறிப்பிட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கப்பட்டு, அதன்பின் உங்களுக்கு உறுதிசெய்யப்பட்ட தகவல் வரும்
- ஒருவேளை நீங்கள் வருமானவரி செலுத்தும் நபராக இருந்தால், இதேபோல வருமானவரி இணையதளத்தில் சென்று, உங்களின் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.
- அதன்பின், இடதுபுறத்தில் இருக்கும் லிங்க் ஆதார் பட்டனை கிளிக் செய்து, அதில் ஆதார் எண், பான்கார்டு எண்ணை குறிப்பிட்டு, ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்ட பெயரை தவறு இல்லாமல் பதிவு செய்ய வேண்டும்