கொரோனா விதிமுறைகளை மீறும் சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆயிரம் அபராதம் அல்லது 8 நாட்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வந்த கொரோனா 2வது அலையின் தாக்கம் தற்போது தான் சற்றே கட்டுக்குள் வந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் முழு ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்களுக்கு செல்லக்கூடாது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சலாப்பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு கடும் சிக்கல்கள் உருவாக ஆரம்பித்துள்ளன.
இமாச்சாலப்பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா தளங்களான மணாலி, சிம்லா, தர்மசாலா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணியாமல் சுற்றுவது, கூட்டமான கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்குவது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலானது. சுற்றுலா பயணிகளின் இத்தகைய நடவடிக்கைகளால் கொரோனா பரவல் அதிகரிக்க கூடும் என்பதால், முக்கிய பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் படி காவல்துறை கண்காணிப்பாளருக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் மாதத்தில் தொடக்கத்திலிருந்து சுமார் 6 முதல் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் இதுவரை இமாச்சலப்பிரதேசத்திற்கு வந்து சென்றுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணாலியில் கொரோனா விதிமுறைகளை மீறும் சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆயிரம் அபராதம் அல்லது 8 நாட்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 300க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.