
பல்வேறு நகரங்களில் இருந்து பணி நிமித்தமாக திருவனந்தபுரம் வரும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக ‘ஒரு நாள் வீடு’ என்ற திட்டத்தை கேரள மாநில அரசு தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தில் அரசு சார்பில் அமைக்கப்படும் விடுதியில் பெண்கள் பாதுகாப்புடன் தங்கி, உணவு உள்ளிட்ட வசதிகளை குறைந்த கட்டணத்தில் பெறலாம். கேரள மாநிலம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்பதை உணர்த்த இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில சுகாதார மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கே.கே. ஷைலியாகூறுகையில், “ பல்வேறு நகரங்களில் இருந்து தேர்வு எழுதவும், நேர்முகத் தேர்வுக்காகவும், வர்த்தக ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ெபண்கள் திருவனந்தபுரம் வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக அரசு சார்பில் ‘ஒன் டே ஹோம்’ அல்லது ஒருநாள் வீடு என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் பெண்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும், நியாயமான கட்டணத்தில் உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் தம்பனூரில் உள்ள கேரள மாநில போக்குவரத்துக் கழக அலுவலகத்தின் 7-வது மாடியில் இதற்காக கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ. 30.56 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.