மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 2016 முதல் எண்ணெய் நிறுவனங்களுக்கு வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கான விலையை மாதந்தோறும் ரூ.2 உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
காஸ் மீதான மானியம் ரத்தாகும் வரை விலை உயர்த்த அனுமதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து காஸ் சிலிண்டர் மீது 10 முறை விலை உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து 2017 ஜூன் 1-ம் தேதி முதல் காஸ் சிலிண்டர் விலை, அரசு அனுமதியுடன் மாதம் ரூ.4 என உயர்த்தப்பட்டது. 2018 மார்ச் வரை விலையை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விலை உயர்த்திக் கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை, மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் விலை உயர்த்தியது மக்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.