மகிழ்ச்சியுடன் புது வாழ்க்கையைத் தொடங்கிய மணப்பெண், திடீர் மாரடைப்பு காரணமாக சில நிமிடங்களிலேயே வாழ்க்கை முடிந்து, மணமேடையிலேயே உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கான மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி மற்றும் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமண சடங்குகள், திருமணம் முடிந்த பின் அனைவரும் புகைப்படும் எடுப்பது என அனைவரும் குதூகுலத்தில் திளைத்திருந்தனர். இதன் பிறகு வானத்தை நோக்கி அருந்ததி நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று மணப்பெண் லட்சுமி, மணமகன் காலில் சுருண்டு விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார், உடனடியாக லட்சுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
திருமணம முடிந்த சில மணித்துளிகளிலேயே மணமகள் இறந்தது திருமண வீட்டாரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மகிழ்ச்சியுடன் மணவாழ்க்கையை துவங்கிய மணப்பெண், சில நிமிடங்களிலேயே மணவாழ்க்கை முடிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.