
தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் நேற்றிரவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டதற்கு பாஜக டெல்லி மேலிடம் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது.
கரீம்நகர் பாஜக எம்பியாக இருப்பவர் பண்டி சஞ்சய் குமார். இவரை நேற்றிரவு கைது செய்த போலீசார் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட பின்னர் சில மணி நேரங்களுக்கு எங்கு வைக்கப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கூட வெளியாகவில்லை என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
சட்ட விரோதமாக பண்டி சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று பாஜக தெரிவித்தள்ளது. மேலும், தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது. அந்த வழக்கில், ''தற்போது எங்கு குமார் வைக்கப்பட்டு இருக்கிறார் என்ற தகவலும், எந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கு விளக்கம் அளித்து இருக்கும் போலீசார், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் காவலில் எடுத்து இருப்பதாகவும், பின்னர் பத்தாம் வகுப்பு தேர்தலில் கேள்வித்தாள் கசியவிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் இல்லாதது, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று பாஜக கண்டித்துள்ளது.
திருமணப் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடிகுண்டு... 2வது மனைவியாக மறுத்த பெண்ணை பழிவாங்கிய இளைஞர்
வரும் சனிக்கிழமை தெலுங்கானா மாநிலத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்கு பிரதமர் மோடி வருகிறார். பேரணியிலும் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் பண்டி சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இது பாஜக மற்றும் பாரத் ராஷ்டிரிய சமிதி தொண்டர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு வீட்டில் இருந்து போலீசார் பண்டி குமாரை கைது செய்தபோது கடுமையாக முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியை விமர்சித்து இருந்தார். போலீசார் அவரை வலுக்கட்டாயமாக தர தரவென இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது கைதுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ஜி. கிஷான் ரெட்டி உடனடியாக பண்டியை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், யாதாத்ரி - புவனகிரி மாவட்டத்தில் இருக்கும் பொம்மலராமராம் போலீஸ் நிலையத்தில் பண்டி சஞ்சய் குமார் வைக்கப்பட்டு இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு கேள்வித்தாள் கசிந்து இருந்தது குறித்து செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக பண்டி குமார் தெரிவித்து இருந்தார். இதற்கு முன்னதாக நேற்றிரவு கைது செய்யப்பட்டார். கேள்வித்தாள் கசிந்து இருந்த விஷயம் தெலுங்கானா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மட்டுமல்லாது கல்வித்துறையையும் பெரிய அளவில் ஆட்டம் காண வைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்திற்கு நடப்பாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கலாம் என்ற நிலையில் நாளுக்கு நாள் பாஜக, பாரத் ராஷ்டிரிய சமிதி இடையே மோதல் வலுத்து வருகிறது. 2014ஆம் ஆண்டில் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா உருவானதில் இருந்து சந்திரசேகர ராவ் தான் முதல்வராக இருந்து வருகிறார். 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான இடங்களை பெற்று இருந்தது. தற்போது தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதிக்கு வலுவான எதிர்க்கட்சியாக பாஜக வளர்ந்து வருகிறது. இதுவே மோதலுக்கும் காரணமாக அமைந்துள்ளது.