சிவன் கோயிலை கைப்பற்றி தாஜ்மஹல் ஆக்கினார் ஷாஜஹான்... அடித்துக் கூறுகிறார் பாஜக., எம்பி., வினய் கட்டியார்

First Published Oct 18, 2017, 3:29 PM IST
Highlights
Taj Mahal was a temple of Lord Shiva which was captured by Shah Jahan says vinay katiyar


தாஜ்மஹல் சர்ச்சை இன்னும் ஓயவில்லை. உ.பி., மாநிலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்க, தன் பங்குக்கு மீண்டும் கொளுத்திப் போட்டிருக்கிறார் பாஜக., எம்.பி., வினய் கட்டியார். 

புதன்கிழமை இன்று ஒரு பேட்டியில் கூறியபோது, வினய் கட்டியார் மீண்டும் இதை உறுதிபடக் கூறியுள்ளார். ஹிந்துக்கள் சிவபெருமானுக்காகக் கட்டிய கோயிலை, ஷாஜஹான் கைப்பற்றி, அதனை தன் மனைவிக்காக பயன்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, கட்டியாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. தாஜ் மஹலுக்கு யோகி ஆதித்யநாத் செல்லவுள்ளாரே என்று கேட்டபோது, அதற்கு கட்டியார், “அந்தப் பெயரில் நான் வேறுபடுகிறேன். அது தாஜ் மஹல் அல்ல, தேஜோ மஹாலய. அது பகவான் சங்கரருக்காக கட்டப்பட்ட கோயில். இந்து மன்னர்கள் அதனை சங்கரருக்காகக் கட்டினர். அதனை கைப்பற்றிக் கொண்ட ஷாஜஹான், அதில் தனது மனைவியை அடக்கம் செய்தார்... என்று கூறியுள்ளார்.

தாஜ்மஹல் குறித்த சர்ச்சைகள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவரின் இந்தக் கருத்து, மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தாஜ் மஹல் ஒரு சிவன் கோவில் என்று கூறப்பட்டு வந்ததும், அதனை ஆய்வு செய்த அரசு அமைப்பு, அது சிவன் கோவில் அல்ல என்றும் முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால், இன்னமும் இந்த சர்ச்சை விலகவில்லை. அதை சிவன் கோவில் என்று சொல்வோரே அதிகமாக உள்ளனர். 

அண்மையில் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹல், உ.பி.,யின் மேம்படுத்த வேண்டிய சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்தும், சுற்றுலா கையேட்டில் இருந்தும் நீக்கப்பட்டது. இதை அடுத்து பரவிய கருத்து மோதல்களும் சர்ச்சைகளும், உபி. பா.ஜ. தலைவர்கள் அடுத்தடுத்து தாஜ்மஹாலை விமர்சிக்க ஒரு காரணி ஆனது.

click me!