4 பேரை அடித்துக்கொன்ற புலிக்கு உடல் முழுவதும் காயங்கள்…. மைசூருவில் புலிக்கு தீவிர சிகிச்சை.. முழு விவரம்..!

By manimegalai aFirst Published Oct 16, 2021, 7:13 PM IST
Highlights

டி23 புலி தசை உயிரணுக்கள் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பற்கள், உடம்பின் பல பகுதிகளில் புலிக்கு காயங்கள் உள்ளன.

டி23 புலி தசை உயிரணுக்கள் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பற்கள், உடம்பின் பல பகுதிகளில் புலிக்கு காயங்கள் உள்ளன.

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் நான்கு பேரை அடித்துக்கொன்ற புலியை வனத்துறையினர் 21 நாட்கள் கடும் முயற்சிகள் எடுத்து நேற்றைய தினம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கபப்ட்டது. முதலில் புலியை சுட்டுக்கொல்ல முடிவு செய்த வனத்துறை கடும் எதிர்ப்பு கிளம்பியதும் அந்த முடிவை மாற்றிக்கொண்டது. 20-ஆம் நாள் இரவில் மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னரும் வனத்துறையிடம் இருந்து தப்பிய புலி மறுநாள் காலையில் எருமை ஒன்றையும் தாக்கி பசியாறியது.

பலகட்ட போராட்டங்களுக்குப் பின்னர் நேற்று மாலையில் டி23 புலியை சுற்றிவளைத்த வனத்துறை, மயக்க ஊசி செலுத்தி அதனை மடக்கினர். 21 நாட்களாக வனத்துறைக்கு போக்குகாட்டி அடர்வனத்திற்குள் அலைந்து திரிந்த புலிக்கு உடம்பின் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து சிகிச்சைக்காக டி23 புலி கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள வனவிலங்கு மீட்பு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

நேற்றிரவு புலியை சிறிய கூண்டில் அடைத்து வனவிலங்கு மீட்பு மையத்திற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். மயக்கம் தெளிந்ததும் புலியை திறந்தவெளி கூண்டுக்குள் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதற்கு புலி எதிர்ப்பு தெரிவித்ததால் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அது பெரிய கூண்டிற்குள் சென்றது. புலிக்கு உணவாக கோழி மற்றும் ஆட்டிறைச்சி கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் புலியின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவர்கள், டி23 புலிக்கு உடலின் பல இடங்களில் காயங்கள் உள்ளன. பற்களிலும் காயம் உள்ளது. முன்னங்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. தசை உயிரணுக்கள் சிதைவு நோயால் டி23 புலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் தொடர் சிகிச்சையால் புலியின் உடநிலை மீண்டுவருவதாகவும் மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.

click me!