வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவு... விரைவில் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By Asianet TamilFirst Published Oct 14, 2020, 8:56 PM IST
Highlights

வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைந்து செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதை கருத்தில் கொண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு கடன்கள் மீதான இ.எம்.ஐ. தவணைகளை ஒத்தி வைக்கும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால், கடன்களுக்கான தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் செலுத்த வேண்டிய வட்டித் தொகை அசலில் சேர்க்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன.


வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 2 மாதங்களாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தது. அதில்,  இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களின் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் வட்டிக்கு வட்டி செலுத்தப்பட்டிருந்தால் அதை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சில வங்கிகள் இந்த உத்தரவை செயல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், பண்டிகை காலம் தற்போது நெருங்கி வருவதால் எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ அதற்குள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 
மேலும் ரூ. 2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

click me!