
நாட்டில் ஏற்பட்டுள்ள பணப்பஞ்சம் குறித்து விளக்கம் தர ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவும் , நிதி குழுவும் சம்மன் அனுப்பியுள்ளது
நாடாளுமன்ற நிதிக்குழு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. டிசம்பர் 15ம் தேதிக்குள் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதே போல்பொதுக்கணக்கு குழு நிதித்துறை செயலர் சக்திகாந்த தாசுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தினசரியும் வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் மக்கள் காத்திருக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுபாடு ஒரு வாரத்தில் சரியாகி விடும் என்று மோடி கூறினார். 50 நாளில் சரியாகும் என்று பின்னர் அறிவித்தார் மோடி. 25 நாட்களாகிவிட்டது. மக்கள் பணத்திற்காக அலைமோதி வருகின்றனர். இந்த நிலை இன்னும் மூன்று மாதம் முதல் 6 மாதம் வரை நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறி அடிவயிற்றில் புளியை கரைத்துள்ளார்.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பணப்பஞ்சம் குறித்து விளக்கம் தர ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் நிதித்துறை செயலாளரும், தினம் ஒரு அறிவிப்பு வெளியிடும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்த தாஸ் ஆஜராக வேண்டும் என்று நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவர் வீரப்ப மொய்லி உத்தரவிட்டுள்ளார்.
இதே போல் பொதுக்கணக்கு குழு சார்பில் அதன் தலைவர் கே.வி.தாமசும் நிதித்துறை செயலர் சக்தி காந்த தாசுக்கு விளக்கம் அளிக்க கோரி சம்மன் அனுப்பி உள்ளார்.