பாதுகாப்பு படை என்கவுன்டரில் 15 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை...

First Published May 17, 2017, 10:58 PM IST
Highlights
Sukma attack avenged Around 15 Naxals killed in multiple encounters in Chhattisgarh


சத்தீஸ்கரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற என்கவுன்டரில் மாவோயிஸ்டுகள் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

300 வீரர்கள் தாக்குதல்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் கடந்த மாதம் 24-ந்தேதி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தை சேர்ந்த 4 வீரர்கள் உள்பட 25 ரிசர்வ் போலீசார் உயிரிழந்தனர். இதையடுத்து மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக கடந்த 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரைக்கும் சிறப்பு என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து ரிசர்வ் போலீஸ் படையின் மத்திய மண்டல இயக்குனர் குல்தீப் சிங் கூறுகையில், சுமார் 300 வீரர்களை கொண்ட கூட்டுப்படைகள் மாவோயிஸ்டுகளை என்கவுன்ட்டர் செய்யும் நடவடிக்கையி்ல் ஈடுபடுத்தப்பட்டன.

சடலம் - ஆயுதங்கள்

சுக்மா எல்லையை ஒட்டியுள்ள பீஜப்பூர் வனப்பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் குறைந்தது 15 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இருப்பினும், அவர்களின் சடலங்களோ அல்லது ஆயுதங்களோ கைப்பற்றப்படவில்லை என்றார்.

சத்தீஸ்கர் டி.ஐ.ஜி. சுந்தர் ராஜ் கூறும்போது, சிறப்பு அதிரடிப்படை, வன பாதுகாப்பு படை, கமாண்டோ வீரர்கள் ஆகியோர் என்கவுன்ட்டரில் பங்கேற்றனர். இதில் 2 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

பருவ மழைக்காலம்

சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் சடலங்களை சக மாவோயிஸ்டுகள் இழுத்துச் சென்றிருக்கலாம். பருவ மழைக்காலம் தொடங்க உள்ளதை முன்னிட்டு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றார்.

click me!