ஆர்யன் கான் வழக்கில் அடுத்தடுத்து ட்விஸ்ட்... விசாரணை அதிகாரி சமீர் வான்கடே தூக்கியடிப்பு.. அடுத்தது என்ன.?

By Asianet TamilFirst Published Nov 6, 2021, 9:25 AM IST
Highlights

வழக்கு விசாரணையின்போது ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக சாட்சி ஒருவர் அளித்தப் பேட்டி சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் ஆர்யான் கானை விடுவிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு ரூ. 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானை விடுவிக்க லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், விசாரணை அதிகாரி சமீர் வான்கடேவிடமிருந்து அந்த வழக்குப் பறிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அங்கு நடந்த பார்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து பார்ட்டியில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் (23) உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஆர்யன் கான் மீது 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

வழக்கு விசாரணையின்போது ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக சாட்சி ஒருவர் அளித்தப் பேட்டி சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் ஆர்யான் கானை விடுவிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு ரூ. 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால், இந்த வழக்கின் உண்மை தன்மை குறித்து விவாதமே எழுந்தது. மேலும், ஆதாரமே இல்லாமல் ஒரு பிரபல நடிகரின் மகனை 25 நாட்களுக்கு சிறையில் வைக்க முடிகிறது என்று ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞரும் பேட்டி அளித்திருந்தார்.

இதற்கிடையே வழக்கின் விசாரணை அதிகாரி சமீர் வான்கடே பல வழக்குகளில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக் தன் பங்குக்குக் குற்றம் சாட்டினார். வழக்கு தொடங்கியது முதலே சமீர் வான்கடே பற்றிய செய்திகள் வட்டமடித்த நிலையில், தற்போது அதிரடியாக வழக்கு விசாரணையிலிருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார். மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே இந்த வழக்கிலிருந்து தூக்கியடிக்கப்பட்டுவிட்டார். மேலும் வழக்கு விசாரணை மும்பையிலிருந்து டெல்லி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் டெல்லி பிரிவுக்கு உடன் இருந்து வான்கடே உதவுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்று வான்கடே விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

click me!