கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா தற்போது அதிமுக பொதுச் செயலாளர் சசிக்கலாவிற்கு பரப்பன அக்ரஹாரத்தில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளுக்கு 2 கோடி ரூபாய் அதிகாரிகள் பணம் பெற்றதாக அறிக்கை வெளியிட்டு இந்திய அளவில் பேசும்படி செய்து விட்டார்.
யார் இந்த ரூபா? இவரது பின்னணி என்ன? என்று பார்ப்போம்.
கர்நாடக மாநிலம் தேவங்கரே பகுதியை சேர்ந்தவர் தான் இவர். கடந்த இரண்டாயிரம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். அப்போது நடந்த தேர்வில் இந்திய அளவில் இவர் 43வது இடத்தை பிடித்துள்ளார்.
பின்னர், பயிற்ச்சிக்காக ஹைதராபாத்தில் உள்ள காவல் பயிற்ச்சி கல்லூரியில் சேர்ந்துள்ளார். அப்போது நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று 5வது இடத்தை பெற்றுள்ளார்.
துப்பாக்கி சுடும் போட்டியில் துல்லியமாக சுடும் திறன் கொண்ட ரூபா தேசிய காவல்துறை அகாடமியில் பல விருதுகளை பெற்றுள்ளதுடன் 2016ம் ஆண்டு காவல்துறையின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளார்.
கம்பீர தோற்றம் கொண்ட ரூபா நேர்மையாகவும் திறம்படவும் செயல்படும் காவல்துறை அதிகாரி என்ற பெருமையை பெங்களூரு மக்களிடையே பெற்றுள்ளார்.
முக்கிய வழக்குகள், முக்கிய பிரமுகர்கள் கைது என்றால் உடனே உயரதிகாரிகள் ரூபாவிடம் தான் ஒப்படைப்பார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த உமாபாரதியை நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்தவர் இவர் தான். இதேபோல் பெங்களூருவில் துணை ஆணையராக இருந்த போது விவிஐபிக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தேவையில்லாமல் அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுக்காப்பை திரும்ப பெற்றார். இதனால் இவர் மீது அரசியல்வாதிகளும் காவல் துறையினரும் கடுப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இவர் பதவி உயர்வு பெற்று ஆயுதப்படை ஏடிஎஸ்பியாக இருந்த போது முதலமைச்சராக இருந்த எடயூரப்பாவின் அணிவகுப்பில் அனுமதி பெறாமல் வந்த வாகனத்தை பறிமுதல் செய்து திரும்ப அனுப்பிய சர்ச்சையில் சிக்கினார்.
மேலும் சமீபத்தில் மத்திய அரசு பணிக்கு சென்ற உயர் ஐபிஎஸ் அதிகாரி பிரதாப் சிம்ஹாவுடன் இணைய தளத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தான் ஓர் நேர்மையான அதிகாரி என்றும் தன்னுடைய பணியில் அரசியல்வாதிகள் உயர் அதிகாரிகள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க சற்றும் விரும்பாத ரூபா தன்னுடைய பணியில் எந்த குறையும் வைக்காமல் துணிச்சலாக செயலாற்றி வருகிறார்.
காவல்துறையில் எதிர்ப்புகளையும் மீறி பதவி உயர்வு பெற்று இன்று சிறைத்துறை டிஐஜியாக பணியாற்றி வரும் இவர் தற்போது சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதற்கு உயர் அதிகாரிகள் கையூட்டு பெற்றதாக குற்றம்சாட்டி இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் ரூபா.