
நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுகின்றனர் எனவும் ஆனால் தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லாதது துரதிருஷ்டமானது எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜெயக்குமார் தாமஸ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போதுமான இடத்தை வழங்கி நவோதயா பள்ளிகள் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம் நவோதயா பள்ளிகள் கட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிராமப்புற மாணவர்களுக்காக நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் பல்வேறு இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
ஆனால் தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என குறிப்பிட்டார்.
பல்வேறு செயலிகள், இணையதளங்கள் மூலம் பிரதமர் மோடி புதிய இந்தியாவை உருவாக்கி வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.