Reservation before many months. 50 Percent discount
பல மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் பண்ணினால் 50 % தள்ளுபடி ! ரயில்வே அதிரடி !!
ரயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கலாம் என ரயில்வே வாரியத்தின் குழு பரிந்துரை செய்துள்ளது.
ரெயில்களில் கட்டணத்தை மறுஆய்வு செய்வதற்காக கட்டண மறுஆய்வு குழுவை ரெயில்வே வாரியம் அமைத்தது. அதில், நிதி ஆயோக் ஆலோசகர் ரவீந்தர் கோயல் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். இந்த குழு பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ததோடு மட்டும்ல்லாமல், ஆலோசனையும் நடத்தியது.
இந்த குழு, ரெயில்வே வாரியத்திடம் தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.. அதட்ன முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
பல மாதங்களுக்கு முன்பே விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், விமான நிறுவனங்கள் தள்ளுபடி அளிக்கின்றன. அதுபோல், ரெயில்களிலும் முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி அளிக்கலாம்.
முன்பதிவின்போது, எவ்வளவு காலியிடங்கள் இருக்கின்றன என்பதை பொறுத்து, 20 சதவீதம் முதல் 50 சதவீதம்வரை தள்ளுபடி அளிக்கலாம்.
பயணிகள் இறுதி பட்டியல் தயாரித்த பிறகுகூட தள்ளுபடி அளிக்கலாம்.
ரெயில் புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி, 2 மணி நேரம் முன்பு வரை முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடி வழங்கலாம்.
ரெயில்களில் கீழ் படுக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்.
வசதியான நேரத்தில் (காலை) சேருமிடத்துக்கு போய்ச்சேரும் ரெயில்களுக்கு கட்டணத்தை உயர்த்தலாம்.
அதே சமயத்தில், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை, பகல் 1 மணி முதல் 5 மணிவரை, சேருமிடங்களுக்கு போய்ச்சேரும் ரெயில்களுக்கு கட்டணத்தை குறைக்கலாம்.
பண்டிகை காலங்களில் கட்டணத்தை உயர்த்தலாம், மற்ற மாதங்களில் கட்டணத்தை குறைக்கலாம்.
சமையலறை பெட்டி இணைக்கப்பட்ட ரெயில்களில் ‘பிரீமியம்’ கட்டணம் வசூலிக்கலாம்.
கட்டணத்தை மாற்றி அமைப்பதை ரெயில்வே கோட்டங்களிடம் விட்டு விடலாம். உள்ளூர் தேவை மற்றும் காலியிட அடிப்படையில் அவர்கள் சரியாக முடிவு எடுப்பார்கள்.
என பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே கீழ் படுக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்குமாறு சிபாரிசு செய்யப்பட்டு இருந்தாலும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு கூடுதல் கட்டணம் இன்றி கீழ் படுக்கைகள் ஒதுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.