
ஆம்பூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் மீது தேசியக்கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், ஒரு வாரத்துக்கு மருத்துவமனையில் தேசியக்கொடி ஏற்றிவைத்து, தேசிய கீதம் பாடும்படி ஆணையிட்டது.
ஆம்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் ஏ. கென்னடி. கடந்த மாதம் 15-ந்தேதி சுதந்திரத்தினத்தன்று மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியின் போது, தேசியக்கொடி ஏற்றும்போதும், தேசியகீதம் பாடியபோதும் அதற்கு மரியாதை கொடுக்காமல், செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பரப்பிவிட்டனர். இதைப் பார்த்த ஆம்பூர் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் பிரபு என்பவர் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் தேசிய கொடி அவமதித்ததாக புகார் அளித்தார்.
இதையடுத்து, டாக்டர் கென்னடி மீது தேசிய கொடிக்கு அவமதிப்பு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய ஆயத்தமாகினர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சரண்டரான டாக்டர் கென்னடி முன்ஜாமீன் கோரினார்.
இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ், டாக்டர் கென்னடிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். அதன்படி தினமும் காலை 10 மணிக்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, சல்யூட் செய்து, தேசிய கீதம் பாட வேண்டும்.
இதை ஆம்பூர் நகர போலீசார் கண்காணித்து, நகர ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிபதிக்கு நாள்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆம்பூர் போலீசார் முன்னிலையில் டாக்டர் கென்னடி, மருத்துவமனை வளாகத்தில் இன்று முதல் தேசியக் கொடி ஏற்றினார்.