பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான போலி ரூ.2000 நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலம் ஆனந்த் விகார் பகுதியில் காஷித் என்பவனிடம் 330 போலி ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை டெல்லி சிறப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அவனிடம் விசாரணை மேற்கொண்டதில், எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தானியர் சிலர் போலி ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசுவார்கள் என்றும் அதற்கு பதிலாக தாங்கள் நல்ல ரூபாய் நோட்டுகளை வழங்குவோம் என்றும் கூறியுள்ளான்.
மேலும் 100 ரூபாய் போலி நோட்டுக்கு 30 ரூபாய் வீதம் வழங்குவதாகவும் இவ்வாறு பெறப்பட்ட போலி ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விநியோகிப்பதாகவும் தெரிவித்தான்.
இந்த தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் காஷித் குறிப்பிட்டான். இதையடுத்து மேற்கு வங்கத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் மேலும் 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.