முன்கள பணியாளர்களுக்கான காப்பீடு 6 மாதம் நீட்டிப்பு! ஏழைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யணும்-பிரதமர் உத்தரவு

By karthikeyan VFirst Published Apr 30, 2021, 10:25 PM IST
Highlights

கொரோனா பெருந்தொற்று சூழல் குறித்து பல்வேறு குழுக்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை மிகத்தீவிரமாக உள்ள நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், கொரோனா சிகிச்சைகள், ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்வது ஆகியவை குறித்தும் பிரதமர் மோடி ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நிறுவனங்கள் உட்பட பல தரப்பினருடனும் ஆலோசனை நடத்திவருகிறார்.

அந்தவகையில், தன்னதிகார குழுக்களுடன் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.  இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்தது மத்திய அரசு.

அதிகாரம் பெற்ற சில குழுக்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அவை, கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவ முன்வந்திருப்பதாக பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சுகாதாரத்துறை மீதான அழுத்தத்தை தன்னார்வலர்களை கொண்டு எப்படி குறைக்க முடியும் என்பது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்பட்டது.

பொருளாதாரம் மற்றும் பொதுநலத்திற்கான எம்பவர்ட் க்ரூப், பிரதமர் கரீப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தின் விரிவாக்கம் குறித்து பிரதமரிடம் காட்சிப்படுத்தியது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் எந்தளவிற்கு மக்களுக்கு பயன் தருகிறது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்கள பணியாளர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு உயர்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் உத்தரவிட்டார்.
 

click me!