மோடியின் மணிக்கூண்டு அரசியல்...! தொப்பியில வெச்சாரு பாருங்க சூட்சமத்தை

By Ganesh RamachandranFirst Published Jan 28, 2022, 7:50 AM IST
Highlights

“மோடி செய்யும் பப்ளிசிடியில் என்ன தவறு? அவரது அரசியல் ஞானத்தில் 10% ராகுலுக்கு உண்டா?” என்று போட்டுத்தாக்குகின்றனர் பாஜகவினர்

பேரைச் சொன்னாலே அதிரும் பிரதேசமென்றால் அது ஜம்மு காஷ்மீர்! அதிர்வுன்னா சாதாரண அதிர்வில்லை. பூகம்பமே வந்தாற்போன்ற குண்டு வெடிப்பு, துப்பாக்கி சப்தம் என்று குலை நடுங்க வைக்கும் அதிர்வுகள்தான் ஜம்முவுக்கு சொந்தம்.  அப்பேர்ப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ல் நீக்கியது மத்திய பா.ஜ.க. அரசு. பின் அவை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. ஆனாலும் அடிக்கடி எகிறி வரும் தீவிரவாதிகளை நெற்றியிலேயே சுட்டு, மட்டையாக்கிட துடியாய் அங்கு நிற்கிறது இந்திய தேசிய ராணுவம்.

ஸ்ரீநகர் லால் சவுக்கில் வரலாற்றுப் புகழ்வாய்ந்த மணிக்கூண்டு ஒன்று உள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இந்த மணிக்கூண்டில் முப்பது ஆண்டுகளாக இந்திய தேசியக்கொடியை சுதந்திர தினத்திலோ அல்லது குடியரசு தினத்திலோ ஏற்ற இயலாமல் இருந்தது. ஆனால் இந்த குடியரசு தினத்தில் தேசிய கொடி அந்த மணிக்கூண்டில் வைக்கப்பட்டது.  இதை மிகப்பெரிய சாதனையாக தேசிய அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். பா.ஜ.க. அரசும் இதை தங்கள் நிர்வாகத்தின் மிகப் பெரிய பெருமை மிகு தருணமாக குறிப்பிடுகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் ‘வெற்று அரசியல்’ என்று தாக்குகின்றனர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். “ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதை மனதில் வைத்துதான் இப்படியான விஷயங்களை தங்களின் சாதனைகளாக, பெருமைகளாக விளம்பரப்படுத்துகிறது பா.ஜ.க. இந்த தேசத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மோடி. ஆட்சிக்கு வந்ததுமே ஸ்ரீநகர் மணிக்கூண்டில் கொடி ஏற்றியிருந்தால் அதை சாதனை என பாராட்டலாம். இத்தனை வருடங்கள் கழித்து செய்துவிட்டு, அதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?” என்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸின் புகைச்சலையெல்லாம் கண்டுக்காத மோடியின் ஆதரவாளர்களோ….குடியரசு தின விழா அன்று மோடி அணிந்திருந்த புது ஸ்டைல் தொப்பி மற்றும் வித்தியாசமான சால்வை இரண்டைப் பற்றிப் பெருமையாக பேசுகிறார்கள். அந்த தொப்பியானது உத்தரகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியாம். அதில் ‘பிரம்மக்கமலம்’ எனும் ஒரு வகையான மலரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. அதேப்போல், மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரிய சால்வை துண்டினை பிரதமர் கழுத்தில் அணிந்திருர்ந்தார்.

இதைக் குறிப்பிட்டு “எங்கள் தலைவர் எவ்வளவு ஸ்டைலியாக இருக்கிறார் பாருங்கள்” என்று மோடியின் அந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர் பா.ஜ.க.வினர்.

ஆனால் அதற்கும் “ஆமாமா இந்த ரெண்டு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்குதே!” என்று பதிலடி கொடுத்தனர் காங்கிரஸார். அதற்கும் விடாமல் “ஆமாம், அதனாலென்ன, இரண்டு மாநிலங்களின் பாரம்பரிய அடையாளங்களையும் தன் மேல் தாங்கி, எவ்வளவு அழகாக பிரசாரம் செய்திருக்கிறார் பாருங்கள் மோடி. இதில் பத்து சதவீத ஞானம் உங்களுக்கு உண்டா? பிரதமர் தங்கள் மாநில அடையாளங்களை இப்படி தன்னில் தாங்கி, தங்களை குடியரசு நாளில் உலகமறிய பெருமைப்படுத்தி உள்ளதாக அம்மாநில மக்கள் குஷியாகியுள்ளனர். இந்த சூட்சமம் தான் ஒரு தலைவனின் தனிச்சிறப்பு.” என்று திருப்பி அடித்துள்ளனர்.

click me!