பெட்ரோல், டீசல் விலை நாளை முதல் நாள்தோறும் மாறுகிறது எப்படி தெரிந்து கொள்வது- ஆப்ஸ் வசதி இருக்கா?-எம்.எம்.எஸ். இருக்கா?

 
Published : Jun 15, 2017, 08:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
பெட்ரோல், டீசல் விலை நாளை முதல் நாள்தோறும் மாறுகிறது எப்படி தெரிந்து கொள்வது- ஆப்ஸ் வசதி இருக்கா?-எம்.எம்.எஸ். இருக்கா?

சுருக்கம்

Petrol diesel rates to change daily from Friday All you need to know

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நாள் தோறும் மாற்றி அமைக்கும் முறை இன்று முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வருகிறது.

மக்கள் விலைமாற்றத்தை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் எஸ்.எம்.எஸ். எண், ஆப்ஸ்(செயலி) போன்றவற்றை எண்ணெய் நிறுவனங்கள் வௌியிட்டுள்ளன. பெட்ரோல் நிலையங்களில் விலை நிலவரத்தை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாள்தோறும் மாற்றம்

உலகின் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. அதேபோல், இந்தியாவிலும் இவற்றின் விலை தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

சோதனை முயற்சி

இதையடுத்து, சோதனை முயற்சியாக கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து, புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், சண்டீகர், ஜாம்ஷெட்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் 40 நாட்களாக சோதனை அடிப்படையில் இத்திட்டம் சோதித்துப் பார்க்கப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியையடுத்து (16-ம் தேதி) இன்று முதல் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

போராட்டம் வாபஸ்

ஆனால், இதற்கு பெட்ரோல் விற்பனை முகவர்கள், உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்தனர். இதையடுத்து, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்து பெட்ரோல் நிலைய டீலர்கள், விற்பனையாளர்கள் பேச்சு நடத்திய பின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

அமல்

இதனால்,  பெட்ரோல் விலையை நாள்தோறும் மாற்றம் செய்யும் முறை இன்று முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருகிறது.

4 முறைகள்

இதன்படி, ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு அடுத்த நாளுக்கான விலை குறித்த விவரம் டீலர்களுக்கு தெரிவிக்கப்படும். டீலர்களுக்கு எம்.எம்.எஸ்., மின் அஞ்சல்,மொபைல் ஆப்ஸ், வெப் போர்டல் ஆகிய 4 முறைகளில் விலை மாற்றம் தெரிவிக்கப்படும்.

மறுநாள் காலை 6 மணி முதல் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெட்ரோல் நிலையங்களில் விலையை எல்.சி.டி. திரை மூலம் காட்சிப்படுத்த வேண்டும்.

செயலி அறிமுகம்

மக்கள் விலையை தெரிந்து கொள்ளும் வகையில் Fuel@IOC என்ற செயலி (ஆப்) ஒன்று உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் அவர்கள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை அறிந்து கொள்ளலாம். இதைத் தவிர, மின்னஞ்சல் (இமெயில்), குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்), இணையதளம் ஆகியவற்றின் மூலமும் தகவல் தெரிவிக்கப்படும்.

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ‘Locate Us’ என்ற செயலி உருவாக்கப்பட்டு விலையை தெரிந்து கொள்ள வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ்.

மேலும், தானியங்கி வசதி கொண்ட பெட்ரோல் பங்குகளில் எண்ணெய் நிறுவனங்களில் இருந்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படும்.

பொதுமக்கள் இந்த தினசரி விலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள 92249-92249 என்ற மொபைல் எண்ணுக்கு ஆர்.எஸ்.பி. (ஸ்பேஸ்) டீலர் கோட் என்று டைப் செய்து குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பினால் அவர்களது மொபைல் எண்ணுக்கு விலை விவரம் அனுப்பி வைக்கப்படும். இதைத் தவிர, ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் மின்னணு தகவல் பலகை மூலமும் விலை விவரம் குறித்து அறிவிக்கப்படும்.

கட்டுப்பாட்டு அறைகள்

இதற்கிடையே விலை நிலவரம் மாறும் முறை எளிதாக, குழப்பமின்றி நடக்க வேண்டும் என்பதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 87 கட்டுப்பாட்டு மையங்களைத் திறந்துள்ளது. 70 மண்டலங்களில் உள்ள அலுவலகங்களில் இந்த கட்டுப்பாட்டு மையம் செயல்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!