நாடாளுமன்ற பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்த மர்ம ஆசாமி - அலறியடித்து ஓடிய எம்.பிக்கள்

First Published Nov 25, 2016, 5:14 PM IST
Highlights


நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த நபர் , திடீரென கீழே குதிக்க முயன்றார். இதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை கீழே விழவிடாமல் பிடித்து, தூக்கி வெளியேற்றினர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. மக்களவை நேற்று காலை தொடங்கி நடந்து கொண்டு இருந்தது. அப்போது எம்.பி.கள் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். காலை 11.20 மணியளிவில் கடும் அமளியும், கூச்சலும் ஏற்பட்டதையடுத்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையை சுமார் 40 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

அவையை ஒத்திவைத்தவுடன் அமைச்சர்கள், எம்.பிகள் வெளியேறிக் கொண்டு இருந்தனர். அப்போது, மக்களவைக்கு மேல் இருக்கும் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் திடீரென மேல் இருந்து கீழே குதிக்க முயன்று, தனது தடுப்பில் இருந்து இறங்கும் முயற்சியில் இருந்தார்.

இதைப் பார்த்த சபாநாயர் சுமித்ரா மகாஜான், மற்றும் பாதுகாவலர்கள் 5 பேர் உடனடியாக, ஒடிச் சென்று அந்த நபரை கீழே விழுந்துவிடாமல் பிடித்தனர். அவரை மாடத்தில் இருந்து வெளியேற்றினர். மேலும், மற்ற பார்வையாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பாக இருந்தது.

 

இந்த சம்பவம் நடக்கும் போது, பிரதமர் மோடி அவையில் இல்லை, ஆனால், நிதியமைச்சர் அருண்ஜெட்லி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் அவையில் இருந்தனர்.

அதன்பின், 40 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அவை கூடியது. அப்போது இந்தசம்பவம் குறித்து அவைத்தலைவர் சுமித்ரா மகாஜான் பேசுகையில், “ பார்வையாளர்கள் அவையில் இருந்து கீழே குதிக்க முயன்றவர் மத்திய பிரதேச மாநிலம், சிவபுரி பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சிங் பாகேல் என்று விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்து, கடும் எச்சரிக்கை செய்து விடுவித்தனர்'' எனத் தெரிவித்தார்.

பொதுவாக பார்வையாளர்கள் மாடத்தின் முன்புறத்தில் டெல்லி போலீசார் சீருடை அணியாமல், முன்பக்கத்தில் 6 முதல்10 பேர் அமர்ந்திருப்பார்கள். அவர்களையும் தாண்டி இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!