குடியரசு தலைவர் உரையின் போது எம்.பி.க்கு மாரடைப்பு - நாடாளுமன்றத்தில் பரபரப்பு

First Published Jan 31, 2017, 5:29 PM IST
Highlights


நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று உரையாற்றிக் கொண்டு இருந்தபோது, மக்களவை எம்.பி.யும், முன்னாள் அமைச்சரும், கேரளமாநிலத்தைச் சேர்ந்த இ. அகமது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் எம்.பி. இ.அகமது, தன்னால் சுவாசிக்க முடியவில்லை, வியர்க்கிறது என்று அருகில் உள்ள உறுப்பினரிடம் கூறி திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவருக்கு நாடாளுமன்றத்தின் ஊழியர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். ஆனால், இயல்புநிலை வராததையடுத்து அவரை  உடனடியாக அதிகாரிகள் ஆர்.எம்.எல். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.அவரின் உடல்நிலையை, பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

மேலும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவர்களிடம் விசாரித்தனர்.

இது குறித்து ஆர்.எம்.எல். மருத்துவமனையின் மருத்துவர் கூறுகையில், “ மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது, எம்.பி. இ. அகமதுவுக்கு நாடித்துடிப்பு இல்லை. மருத்துவர்கள் குழு, அவருக்கு மீண்டும் இதயத்துடிப்பு இயல்பு நிலைக்கு வர முயற்சிகள் மேற்கொண்டு, சிகிச்சை அளித்தனர். இப்போது, அவரின் உடல்நிலை தீவிர கண்காணிப்பில் இருக்கிறது'' என்றார்.

78-வயதாகும் இ.அகமது, கேரளமாநிலத்தின் மலப்புரம் மக்களவைத் தொகுதியின், இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி.ஆவார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!