வாகனங்கள் வைத்து உள்ளவர்கள் பட்டினியாக இல்லை, வசதியாகவே இருக்கிறார்கள், அவர்களால் பெட்ரோல் விலை உயர்ந்தாலும் பணம் செலுத்த முடியும் என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் தற்போது தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் விலை உயர்வே காணப்படுவதால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் 11 சதவீதம் விலை உயர்ந்து, பெட்ரோல் 7 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கன்னன்தானம் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வரி விதிக்கப்படுவது என்பது உள்கட்டமைப்புகளுக்கு நிதி திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் விதிக்கப்படுகிறது. வரி மூலம் வசூலிக்கப்படும் அனைத்தும், ஏழைமக்களுக்கே செல்கிறது, வரி உயர்வை உள்நோக்கத்திலேயே அரசு எடுத்துள்ளது.
ஆதலால், யாரால் வரி செலுத்த முடியுமோ, யாரால் பெட்ரோல் வாங்க முடியுமோ, அவர்கள் வரி அதிகமானாலும் செலுத்துவார்கள். வாகனங்கள் வைத்திருப்போர் யாரும் பட்டினி கிடக்கவில்லை எரிபொருளுக்கான விலையை கொடுக்கும் அளவுக்கு வசதியுடன்தான் இருக்கின்றனர். எனவே வசதி படைத்தவர்கள் பணம் செலுத்தித்தான் ஆக வேண்டும். பெட்ரோல் வாங்குவது யார்? கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் வைத்திருப்பவர்கள்தானே? என கேள்வி எழுப்பி உள்ளார்.
நமது நாட்டில் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றது. இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு கோடிக்கணக்கான நிதி தேவைப்படுகிறது. சமூகத்தில் பின்தங்கி இருக்கும் இந்த மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளித்து வரும் மத்திய அரசு, அதற்கான நிதியை வரிகள் மூலமே வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.