ஆந்திர மாநிலம், ராயலசீமா பகுதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களை கண்டுகொள்ளதாக பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக 68 பைசாக்களை காசாலையாக எடுத்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் அனுப்பினர்.
பிரதமர் மோடி இன்று தனது 68-வது பிறந்நதாளைக் கொண்டாடுகிறார்
குற்றச்சாட்டு
ஆந்திரா மாநிலம், ராயலசீமா பகுதியில் கர்னூல் ,கடப்பா, அனந்தபூர், சித்தூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
இதில் மாவட்டங்களுக்கு முறையாக நீர்பாசன திட்டங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்து கொடுக்கவில்லை, தொழில்துறை திட்டங்களும் செயல்படுத்தவில்லை. இதனால், அடிப்படை வாழ்க்கையை நடத்தவே மிகவும் சிரமப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
காசோலை
ஒட்டுமொத்தமாக ராயலசீமா பகுதியை புறக்கணிக்கப்பட்டு விட்டதால், அதை பிரதமர் மோடிக்கு உணர்த்தும் வகையில் அவரின் 68-வது பிறந்தநாள் பரிசாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 68 பைசாவை காசோலையாக எடுத்து அனுப்பி உள்ளனர்.
400 விவசாயிகள்
இது குறித்து ராயலசீமா சகுநீதி சதனா சமிதி(ஆர்.எஸ்.எஸ்.எஸ்.), உறுப்பினர் சுதாகர் ராவ் கூறுகையில், “ கர்னூல் மாவட்டத்தில் மட்டும் 400 காசோலைகளை விவசாயிகளிடம் இருந்து பெற்றுள்ளோம். இதுபோல் மற்ற 4 மாவட்டங்களில் இருந்தும் காசோலைகள் வசூலிப்போம்’’ என்றார்.
பாலைவனம்
ஆர்.எஸ்.எஸ்.எஸ். அமைப்பின் துணைத் தலைவர் ஓய்.என். ரெட்டி கூறுகையில், “ ராயலசீமா பகுதியில் உள்ள விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பாகத்தான் இந்த காசோலையை அனுப்புகிறோம். எங்கள் பகுதியில் கிருஷ்ணா, பென்னா நதி இருந்தபோதிலும், பாலைவனமாகவே இருக்கிறது, தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
பல நீர்பாசனத் திட்டங்களை செயல்படுத்தப் போவதாக மத்திய, மாநில அரசு வாக்குறுதி அளித்தன. ஆனால், ஏதும் முடிக்கப்படவில்லை, மோசமான நீர்பாசன கட்டமைப்பினால், விவசாயிகளுக்கு நீர் ஒதுக்குவது மோசமாகி வருகிறது.
சிறப்பு திட்டங்கள் வருமா?
தொழில்துறை வரும் என உறுதியளித்தனர். ஆனால், நீர்பாசன வசதியும் கிடைக்கவில்லை, தொழில்துறை திட்டங்களும் வரவில்லை. கடப்பாவில் எக்கு தொழிற்சாலையும், குண்டக்கல்லில் ரெயில்வே மண்டலம் வருகிறது, இங்கு ஏதும் வரவில்லை.
எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் பகுதிக்கு பிரதமர் மோடி சிறப்பு திட்டங்களை அறிவிப்பார் என நம்பி, அவரின் பிறந்தநாள் பரிசாக இந்த காசோலையை அனுப்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.