பெற்றோர்களையும், உடன் பிறந்தவர்களையும் அரசு ஊழியர்கள் பராமரிக்காமல், நிராகரித்தால், அவர்களின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று அசாம் மாநில அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.
அவ்வாறு அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் ஊதியத்தொகை, அவர்களின் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்களுக்கு வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் மாநிலமாக அசாம், இந்த சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
பா.ஜனதா ஆட்சி
அசாம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக சர்பானந்த சோனாவால் இருந்து வருகிறார்.
“பெற்றோர்கள் பராமரிக்கும் பொறுப்பு மற்றும் நம்பகத்தன்மை கண்காணிக்கும் மசோதா 2017’’- என்ற பெயரில் இந்த மசோதா நேற்றுமுன்தினம் அசாம் சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கு பெற்றோர்களை பராமரிக்கும் பொறுப்புகளை வழங்குதல் முக்கிய அம்சமாகும்.
10 சதவீதம் ஊதியம் பிடித்தம்
இந்த மசோதாவை அறிமுகம் செய்து வைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா பேசுகையில், “ பெற்ற பிள்ளைகள் பராமரிக்காத காரணத்தால், ஏராளமான பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் வசிக்கிறார்கள்.
இந்த மசோதா கொண்டுவந்த பின், அரசு ஊழியர்கள் தங்களின் பெற்றோர்களையும், மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகளையும் பராமரிக்காவிட்டால் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அந்த தொகை அவர்களுக்கு வழங்கப்படும். அரசு ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடவில்லை என்றபோதிலும், பெற்றோர்களும், உடன்பிறந்தவர்களும் நிராகரிக்கப்படக்கூடாது என்பதை உறுதிசெய்வது அவசியமாகும். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களும் அளிக்கலாம்’’ எனத் தெரிவித்தார்.
நிறைவேற்றம்
இந்த மசோதா சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் எம்.எல்.ஏ., எம்.பி, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சேர்த்து நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அசாம் மக்களுக்கு அவமானம்
, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான தருண் கோகாய், கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற மசோதாவை நிறைவேற்றி, அசாம் மாநில மக்களை அவமதிப்பு செய்துவிட்டார்கள். அசாம் மக்கள் பாரம்பரியமாகவே பெற்றோர்களையும், உடன்பிறப்புகளையும் கவனித்து வருகிறார்கள் என்றார்.