கேரள மாநிலம் கொல்லத்தில் இரும்பு நடை மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார். இதில் நடந்து சென்ற 20 பேர் காயம் அடைந்தனர்.
கொல்லத்துக்கு அருகே சாவாரா பகுதியில் கேரள மினரல்ஸ் அண்ட் மெட்டல்ஸ் லிமிடட் நிறுவனப் பகுதியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. சாவாரா பகுதியைச் சேர்ந்த ஷியாமளா என்ற பெண், இந்த விபத்தில் பலியானார். காயமடைந்த பலர் அருகில் உள்ள பல மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டனர்.
திங்கள் கிழமை இன்று காலை 10.30 மணி அளவில் கேஎம்.எம்.எல் நிறுவனத்தையும் எம் எஸ் யுனிட்டையும் இணைக்கும், ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள இரும்பு நடை மேம்பாலம்தான் திடீரென இடிந்து விழுந்தது. நிறுவன பணியாளர்கள் பலர் இன்று காலை நடந்து சென்று கொன்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டு பலர் ஆற்றில் விழுந்தனர். இதில் காணாமல் போன பலரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.